பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


இவ்வாறு வலிமைக்கு முதலிடம் கொடுத்துப் போட்டியை வைத்துக் கிரேக்கர்கள், மிருகங்கள் போல சில சமயங்களில் வெறித்தன்மையோடு, விளையாட்டுக்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஒரு சமயம், ஒன்பது மைல் தூரம் உள்ள தேர்ப் பந்தயப் போட்டியில் கலந்துகொண்ட நாற்பது பேர்களில், பந்தயத்தின் கடைசிக் கோட்டைக் கடந்தவன் அதாவது உயிரோடிருந்தவன் அர்சிலஸ் என்ற ஒரே ஒரு வீரன்தான். மீதி முப்பத்தொன்பது வீரர்களும், வரும் வழியிலேயே தேர்ச்சக்கரங்களினால் இடிபட்டும், கீழே வீழ்ந்தும் தேரிலிருந்து வீழ்ந்து மிதிபட்டும், இறந்து ஒழிந்தனர். இவ்வாறு நசுங்கிச் சாகும் முரட்டுத்தனமான பந்தயங்களிலும் கூட அவர்கள் அதிக ஈடுபாடு காட்டியுள்ளனர்.

இவ்வாறு நாட்டின் தற்காப்புக்காகவும், நாட்டு மக்களின் நல்லெழில் நிறைந்த உடலழகுக்காகவும், உறுதிக்காகவும், மதத்தோடு இயைந்த பக்தி வாழ்க்கை வாழ்வதற்காகவும் ஒலிம்பிக் பந்தயங்கள் உண்டாயின. தோன்றியதன் பணியை, பந்தயங்களும் பாரபட்சமற்ற முறையில் நாட்டினருக்கும் செய்தன. கிரேக்க நாடு கீர்த்தியுடனும், செழிப்புடனும் செம்மாந்த நிலையில் வாழ்ந்த வரைக்கும், ஒலிம்பிக் பந்தயங்கள் பீடும் பெருமையும் பெற்றுத்தான் விளங்கின. ஆனால், காலம் தன் கோலத்தை செய்யத் தொடங்கியது. அதன் விளைவு....?

ஒலிம்பியாவில் நடந்தது வெறும் விளையாட்டுப் பந்தயங்கள் மட்டுமல்ல. வேடிக்கையாகப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மட்டும் அல்ல; அவை ஆண் மக்களின் திறமைக்கும், வலிமைக்கும் உரைகல்லாக இருந்தன. நாட்டு மக்களின் நலத்தைக் காக்கும் நிறைகளமாக விளங்கின.