பக்கம்:கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


ஆண்டவனே வந்து அளந்து கட்டிமுடித்து ஆரம்பித்த விளையாட்டுப் பந்தய மைதானம் என்று மக்கள் நம்பி வழிபட்ட மைதானத்திற்குள்ளே, ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டு வாழத் தொடங்கிவிட்டான். கடவுள் குடியேறியிருந்த இடம் என்று மக்கள் வணங்கிய திடலில் மனிதன் குடியேறி, அந்த புனிதத் தன்மையையும் மாறா மரபையும் மதிப்பையும், மண்ணோடு மண்ணாக்கி விட்டான். இந்த நிலையில்தான் இறப்பா பிழைப்பா என்ற இழுபறி நிலையில் ஒலிம்பிக்பந்தயங்கள் இருந்தன.

நீரோவினால் மக்கள் நெஞ்சங்கள் புண்ணாயின. மன்னனின் மாபாதகச் செயலாலும், மக்களுக்கு மதத்தின் மேல் இருந்துவந்த பிடிப்பும் துடிப்பும் நழுவிப் போனதாலும், ஒலிம்பிக் பந்தயங்கள் சரிவர நடைபெறவில்லை. கிரேக்கன் ஒருவன் வெற்றி வீரனாக வரக் கூடிய வாய்ப்பை ரோம் நாட்டினர் அளிக்கவும் இல்லை. அனுமதிக்கவும் இல்லை.

ஆட்சியாளருக்கு முன்னால், ஆற்றலும் திறமையும் போட்டியிட முடியவில்லை, இவ்வாறு ஒலிம்பிக் பந்தயம் உயர்ந்த நிலையில் இருந்து தாழ்ந்த நிலையை ஆரத் தழுவிக் கொண்டிருந்தது. நீரோவுக்குப் பின் வந்த ரோம் நகரை ஆண்ட மன்னனான முதலாம் தியோடசிஸ் என்பவன், மத எரிச்சலின் காரணமாக, கி.மு. 394 ம் ஆண்டு ஒலிம்பிக் பந்தயத்தைத் தடை செய்தான்.

காலங் காலமாக, கிரேக்கர்களால் 292 முறை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வந்த ஒலிம்பிக் பந்தயங்கள், மன்னன் இட்ட சட்டத்தால் மறைக்கப்பட்டன. புனிதமான விழாவும் ஆழப் பெருங்குழியில் இட்டுப் புதைக்கப்பட்டது. பந்தயம் மட்டும் நிறுத்தப்படவில்லை. பந்தய மைதானத்திலே புனிதத்தின் திருவுருவாக வைத்துக்