5
யாக். 2
அன்பறு விசுவாசம்மே யமையுமென்றிருத்தல் வேண்டாம்
பண்பறு பேயும் நன்றே பரமனை விசுவாசிக்கும்
பின்புநல் வினையில்லாமற் பிழைக்குமோ விசுவாசந்தான்
அன்பெனக்கில்லா விட்டால் ஆவதொன்றில்லை காணே.
குறள்
நண்பெனுஞ் சிறப்புக் கொண்ட நவையறு மார்வ மாந்தர்
புன்கணீர் பூசல் செய்யப் புதவுடை வெள்ளமாகி
என்புயிர் பொருள்களெல்லாம் ஏனையோர்க் குரிமைசெய்யும்
அன்பெனக்கில்லா விட்டால் ஆவதொன்றில்லை காணே.
பொது
பண்பெறு மழலை மக்கள் பயிலரு மசுத்தரேனும்
அன்புடையிருபெற்றோரும் அருகணைத் துவகை பூப்பர்
மன்பெருங்குறைகளெல்லாம் மறைத்துறு பாவம் போக்கும்
அன்பெனக்கில்லா விட்டால் ஆவதொன்றில்லை காணே.
நண்பறத்தூய ரேனும் நளிகடற் காதற்றேவன்
எண்பதத் தேழையாகி இழிகுலத்தவரோடுண்டு
புண்படப் பாடுபட்டுப் பொன்றினர் துளியதேனும்
அன்பெனக்கில்லா விட்டால் ஆவதொன்றில்லை காணே.
துன்புறு தவத்தின் யோகத்துறவறந் துவரப் பூண்டு
வன்புறு யாக்கை பெற்று வாசியில் வாழ்ந்து நீடி
எண்பெருஞ் சித்தி பெற்றே எழிலுறு நிலை நின்றாலும்
அன்பெனக் கில்லாவிட்டால் ஆவதொன்றில்லை காணே.
பண்புற மறைபயின்று பலபெரும் பட்டம் பெற்றும்
இன்புறப் பிரசங்கித்தும் இலகுரை விளக்கங்கூறி
நம்புறப் புதுமை செய்து நரருறும் போய்விடுத்தும்
அன்பெனக்கில்லா விட்டால் ஆவதொன்றில்லை காணே.