பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேற்றுமையில்லை; தகுதிப்பாட்டிலேயே வேற்றுமை உண்டு. வீணை பொதுவாக இருந்தாலும் மிழற்றுபவனின் திறமைக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப இசைவெள்ளம் பெருக்கெடுத்து ஒடுவதைப் பார்க்கிறோம். மிழற்றத் தெரிந்தவர் வீணையை மிழற்றினால் இன்னிசை பரவும். மிழற்றத் தெரியாதவர் மிழற்றினால் அபசுரமே பிறக்கும்.

வீணை போன்றதே மானிட யாக்கை. அந்த யாக்கையை அறிவின் விளக்கமாகவும் ஆக்கலாம். அன்பின் விளைநிலமாகவும் ஆக்கலாம். அருள் ஒழுக்கத்தின் செயற்பாடாகவும் ஆக்கலாம். அங்ஙனமின்றிக் குப்பைத் தொட்டியைவிடக் கேடானதாகவும் ஆக்கலாம். அது இயக்குவோரின் ஆற்றலையும் தகுதிப்பாட்டையும் பொறுத்தது. இதையுணர்ந்தே,

நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
.......................................
வல்லமை தாராயோ? - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!

என்று கேட்கிறார் பாரதியார்.

காடுகளைக் கழனிகளாக்கிப் பயன் காண்பது மனித ஆற்றல். கல்லைப் பேசும் பொற்சிற்பமாக்கிக் கவின் செய்வது மனித ஆற்றல். இவைபோன்றே, குறைமலிந்த மனித வாழ்க்கையை நிறைவுடையதாக்கித் தெய்வத்தின் நலம் பொதுளச் செய்வதும் மனித ஆற்றலேயாகும். ஏன்? மனிதனே தெய்வமாகலாம்; வாழ்வாங்கு வாழ்ந்தால்! ஆம்! தெய்வமாக மதிக்கப் பெறுவான். இத்தகு பேராற்றல் அவனுக்குள்ளே அடங்கிக் கிடக்கிறது. "தெய்வம் நீ என்றுணர்” என்று நமக்கு உணர்வூட்டுகிறார் பாரதியார். 'கைவருந்தி உழைப்பவர் தெய்வம்' என்கிறார்.

இந்தப் பேருண்மைகளை உள்ளடக்கியே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,