பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 235


அறிவறிந்த மக்கட்பேறு

வீடும் நாடும் சிறப்பது நன்மக்களாலேயாம். நன் மக்களின் தோற்றத்திற்கு நிலைக்களன் மனையற வாழ்க்கை. வாழ்க்கைத் துணை நலத்தைத் தொடர்ந்து திருவள்ளுவர் "மக்கட் பேறு” பேசுகின்றார். ஒன்றிற்கொன்று தொடர்பிருக்கிறது. நன்மக்கட்பேறு வேண்டுமானால் தலைவனும் தலைவியும் நல்லவர்களாக இருத்தல் வேண்டும். ஒழுக்கம், பண்பு போன்றவை வழி வழி வளரக்கூடியன. அதனாலன்றோ கம்பன் 'குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிகட்கெல்லாம்', என்று பேசுகின்றான். திருவள்ளுவரும் 'குலமுடையான் கண்ணே யுள' என்கிறார்.

பொதுவாக பால்வேறுபட்ட இருவர்-ஒருவன் ஒருத்தி கூடி வாழ்ந்தாலே குழந்தை பிறக்கும்-மக்கட்பேறு கிடைக்கும். அஃது இயற்கை. ஆனால், திருவள்ளுவர் இத்தகு இயற்கையான மக்கட்பேற்றினைப் பாராட்டிப் பேசவில்லை. அவர் விரும்புவதெல்லாம் 'அறிவறிந்த மக்கட்பேறு'. இந்த அறிவறிந்த மக்கட் பேற்றினைப் பெற விரும்பும் தலைவனும், தலைவியும் தங்களை முதலில் செழுமைப் படுத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் சீலத்தாற் சிறந்த வாழ்வு நடத்துதல் வேண்டும். வித்தின் இயல்பு - நிலத்தின் இயல்பு ஆகியவற்றைச் சார்ந்தே பயிரின் இயல்பு பயிரின் - நலம்.

அடுத்து, இன்பத்திற்காக மட்டுமே மனைவாழ்க்கையல்ல. இலட்சியத்தை நோக்கி நடைபோடும் வாழ்க்கையில்வழியிலே களைப்புத் தோன்றாமல் பயணம் செய்யவே உலகியல் இன்பங்கள். மனைவாழ்க்கையும் அத்தகைத்தே. சிலர் கருதுவது போன்று அது தீமையுமன்று-சிற்றின்பமுமன்று. எனினும், இலட்சியத்தை மறந்த நிலையில் இங்கேயே தங்கிக் கிடக்கும்போது சான்றோரால் அது தவறு எனக் கண்டிக்கப்பெற்று வந்திருக்கிறது. வாழ்க்கையின்