பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இனிய வார்த்தைகளைப் பேசலினும், அகமும் புறமும் ஒத்துப் பேசுதல் பெருந் தவ ஒழுக்கமாகும். சிலர் உதட்டில் இனிய வார்த்தைகளைப் பேசுவர். ஆனாலும் அகத்தே கருப்பு வைத்து வாழ்வர். அதனாலேயே திருவள்ளுவர் சிறுமையுள் நீங்கிய இன்சொல்' என்று குறிப்பிடுகின்றார்.

இதற்குச் சிறுமைப் பண்புகள் நீங்கிய மனிதன் சொல்லும் இன்சொல் என்றும் பொருள் காணலாம். சொல்லும் சொற்களுள் விளைவினால் தீமையில்லாத - தீமை பயவாத நற்சொல்லும் இன்சொல்லேயாம். சிறுமை - சிறுமிய மரபுகள் அகத்திலும் கூடா-செயல்களிலும் கூடா. சிறுமையினின்றே சிறுமை தோன்றும். பிறருக்குச் சிறுமை தரத்தக்க செயலைச் செய்கின்றவனும் சிறுமை உடையவனேயாம்.

இனிய பண்புகளிலிருந்தே இனிமை பிறக்கிறது. இனிமை - இனிய சொற்கள் இம்மை வாழ்வில் நண்பர்களைக் கூட்டுவிக்கும்; துன்பத்தை நீக்கும். இன்பத்தைப் பெருக்கும். அவ்வழி மறுமையும் கூட்டுவிக்கும்; மறுமை இன்பத்தை அளிக்கவல்ல இறைவனும் இனிமை தவழும் புன்சிரிப்பையுடையவன். ஆதலால், வருந்தி உழைத்துப் பெறக் கூடிய மறுமை இன்பத்தையும் இனிய சொற்களை வழங்குவதன் மூலம் எளிதிற் பெற்றுவிட முடியும் என்பதும் திருவள்ளுவர் கருத்து. ஆனால் உலகியலில் இந்த இனிய - எளிய பண்பு கூட வளராதது வியப்பாக இருக்கிறது.

"சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பந் தரும்."(98)

செய்நன்றி

றைமை என்பது நற்குணங்கள் பலவற்றின் கூட்டு. குணங்கள் பண்பு; இறைவன் பண்பி. நற்குணங்கள் பல