பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 289


அப்பொழுதே உயிருக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதன் காரணமாக உயிர், உயிர்த்துடிப்போடு வாழ்கிறது. ஓர் உயிர் நலம்பெற்ற உயிரோட்டத்தோடு கூடி வாழ வேண்டுமானால் அதற்கு உதவி செய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகம் தேவை. அந்த வாய்ப்புகள் இல்லையானால், உயிரின் இயல்புகளும் ஆற்றல்களும் வெளிப்படுதற்கு வழியில்லாமற் போகும். அதனாலேயே திருவள்ளுவர், இரப்பாரே இல்லாத உலகம் உயிரற்ற பாவை சென்று வந்தாற் போன்றது என்றார்.

மனித உணர்வின் வெளிப்பாடுகள் துன்பங் கண்டபோது அழுதலும், இன்பங் கண்டபோது மகிழ்தலும் ஆகும். இத்தகு பண்பு தன்னளவினதாக இருக்கும் பொழுது பெரிதும் பயன்தராதது மட்டுமின்றி ஆக்கமில்லாமலும் போய்விடுகிறது. பிறர் துன்பங் கண்டு நோதலும், பிறர் இன்பங் கண்டு மகிழ்தலும் பண்பாட்டின் விளைவு; உயிர் வாழ்தற்குரிய வழி. இக் குறிப்பிலேயே திருவள்ளுவர் இரப்பாரும் இவ்வுலகில் இருத்தல் வேண்டும் என்று பேசுகின்றார். இரப்பார் ஏழைமையின் காரணமாக இரக்க வேண்டும் என்பதற்காக அல்ல. பிறரின் அன்பு உணர்ச்சியைத் தூண்டி உயிர்பெற்று வாழவும், உய்தி பெறவுமேயாகும். இப் பார்வையோடு இரப்பாரைப் பார்த்தால் ஏழைமையின் துன்பமும் ஏளனமும் தோன்றாது. இடுவோர் இயல்பு, இரப்பாரின் துன்பம் மாற்றுவதாக இல்லாமற்போனால் இரப்போர் வாழ்க்கை கொடுமை யானது. ஈத்துவக்கும் இன்பம் பெற விழைவோர்க்கு இரப் பார் இல்லையானால் அவ் வின்பத்தைப் பெற முடியாமல் அன்றோ போய்விடும்! வைத்துடைமை வண்கணாளர். வாழும் நாட்டிலே இரப்பார். இருத்தலைவிட இறத்தலே நன்று என்று வள்ளுவரே வகுத்துப் பேசுகின்றார்.

ஆனால், வள்ளுவர் காலச் சூழல் வேறு. நாம் வாழும் சூழல் வேறு. வள்ளுவர் காலத்தில் பிறர் துன்பம் மாற்ற முடியாதபோது - பிறருக்கு உதவி செய்ய முடியாத இயல்பு

தி.19.