338 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்
உதவுமானால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயங்கக் கூடாது என்பதே வள்ளுவப் பெருந்தகையின் கருத்து.
திருவள்ளுவர் காலத்தில் தமிழகத்தில் சமய சமுதாயக் கருத்துக்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து மோதின. புத்தரின் கருத்துக்கள் பரவின. மகாவீரர் கருத்துக்கள் பரவின. ஆரிய மதக் கருத்துக்களும் பரவின. இக்கருத்துக்களைச் சார்ந்தோர் அனைவரும் தங்களைப் பல்லாற்றானும் உயர்த்திக் கொண்டு கூறினர். அந்தச் சூழலில்தான் திருவள்ளுவர், யார் சொல்லுகிறார் என்பது பற்றிக் கவலைப் படாதே! என்ன சொல்லுகிறார்கள் என்பதைத் தெரிந்து - தெளிந்து - அது உண்மையானதாக - வாழ்க்கைக்கு இயைபுடையதாக இருக்குமானால் ஏற்றுக் கொள் என்று கூறினார்.
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”
(423)
அரசு பொறுப்புள்ள ஒன்று. அரசன் அதிகாரத்திற்கு எல்லைகளுண்டு. ஆனால் அரசினுடைய பொறுப்புகளும் கடமைகளும் மிகப் பரந்தன. நாட்டு மக்களிடையே நல்லொழுக்கமும் நன்னெறிச் சார்பும் நிலைபெற்றிருக்கும் படி செய்ய வேண்டிய பொறுப்பு அரசினுடையதேயாகும்.
அதனாலன்றோ நன்னடை 'நல்குதல் வேந்தர்க்குக் கடனே' என்று புறநானூறு பேசுகிறது. நன்னடை நல்குதல் என்றால் உத்தரவுகள் மூலம் என்பது பொருளன்று. சட்டங்கள் மூலமும் அன்று. கட்டுப்பாடுகள் மூலமும் அன்று. தண்டனைகள் மூலமும் அன்று. அரசன், தான் வாழ்தலின்மூலம் நாட்டு மக்களுக்கு நல்லொழுக்கத்தை எடுத்துத் தர வேண்டும். மேலும் நாட்டில் தனிமனிதனுடைய - சமுதாயத்தினுடைய ஒழுக்க நெறிகளைப் பற்றி உரத்துப்