பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

97






மார்ச் 21


என்னைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் நேசிக்கும் இனிய வரத்தினை நல்குக!

இறைவா! ஏன் சொர்க்கத்தையும் படைத்து-நரகத்தையும் படைத்தாய்? என்னுடைய சுதந்தரத்தைப் பாதுகாக்கவா? நான் அனுபவிப்பது சுதந்தரமா? ஆம், இறைவா! நான் அனுபவிப்பது சுதந்தரம்தான். ஆனால், நானோ மற்றவர்களுடைய சுதந்தரத்தையும் தட்டிப்பறித்து அனுபவிக்கிறேன். ஆம், இறைவா! இதில் என்ன ஒளிவுமறைவு. எனக்கு எடுக்கத் தேரியுமே தவிர வைக்கத் தெரியாது. வாங்கத் தெரியுமே தவிர, கொடுக்கத் தெரியாது.

முடை நாற்றம் எடுத்த அம்மணமான சுரண்டல்-சுயநல வாழ்க்கை என் வாழ்க்கை! நாளும் என்னை ஊட்டி உண்பித்து வளர்க்கும் நிலத்துக்குக்கூட உரமிட மாட்டேன். காய்களால்-கனிகளால் வாழ்விக்கும் மரங்களுக்கு உரமிட மாட்டேன். ஏன்? பால் தந்து வாழ்வு தரும் பசுமாடுகளுக்கும் என்னிடமிருந்து எதுவும் கைம்மாறு இல்லை.

இறைவா! இதற்குப் பெயர்தான் சுதந்தர வாழ்க்கையா? ஆண்டவனே! என் மனத்தில் அன்பினைப் பெருக்கும் ஊற்றினைத் தந்தருள் செய்! என்னைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் நேசிக்கும் வரத்தினைத் தந்தருள் செய்! நான் என்னைப் பூரணத்துவமுடன் காப்பாற்றிக் கொள்ளும் வாழ்க்கையை முறையாக நடத்தினாலே மற்றவைகளுக்கு வாழ்வளிக்கும் பேறு கிடைத்துவிடுகிறது.

இறைவா! என்னை வளர்ப்பதும் இயற்கையை வளர்ப்பதுமான கடமையைச் செய்யும் மனத்தினைக் கொடு. இயற்கையை நேசித்து இயற்கையோடு இசைந்து வாழ்வேன், இது உறுதி!

கு.x.7