பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






மே 29


இறைவா, ஓர் உத்தமத் தோழனை அருள் செய்க!

இறைவா! தம்பிரான் தோழரே! எனக்கும் ஒரு தோழன் தேவைப்படுகிறான். நண்பனைத் தேடித்தேடி அலைகிறேன். இது வரையில் கிடைக்கவில்லை. நண்பர்கள் கிடைக்காமல் இல்லை. கூட்டம் நிறைய இருக்கிறது!

உறவு கொண்டாடுகிறார்கள்! உரிமை கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்களால் எனக்கு என்ன பயன்?

சுந்தரருக்குத் தோழனாகிப் பொன் கொடுத்தாய். பொருள் கொடுத்தாய். பெண் கொடுத்தாய். அவர் பகைவர்களை நண்பர்களாக்கினாய். மன்னர்களோடு இணைத்து நட்பு உண்டாக்கினாய். எனக்கு இப்படி எல்லாம் செய்யக் கூடிய நண்பர்கள் யாரையுமே காணோம்!

எனக்குக் கிடைப்பவர்கள், என்னிடம், வாங்கியவர்கள். வாங்கினால் கூட பரவாயில்லை. இறைவா, நானும் கொடுத்தால்தானே நட்பு வளரும். கூட்டு உழைப்பிலே பொருளை உற்பத்தி செய்து எடுத்துக்கொண்டால் பரவாயில்லை. உழைப்பே தர மறுக்கிறார்கள்!

உற்றுழி உதவும் நண்பரை - எனக்குத் தோளொடு தோள் கொடுத்து நிற்கும் ஒர் உத்தமத் தோழரை அருள் செய்க எனக்குச் செல்வமாக - ஆக்கமாக அமையும் ஓர் அருமையான தோழரை அருள் செய்க காலந்தாழ்த்தலாகாது?

இறைவா, எனக்கேற்ற வேறு தோழர் கிடைக்காது போனால் ஒரு பணிவான வேண்டுகோள்! நீயே எனக்குத் தோழனாக வந்துவிடு. உன்னைச் சுந்தரர் திட்டியது போலத் திட்டமாட்டேன். இறைவா, அருள் செய்க!