பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

185






ஜூன் 17


கைத்திருத்தொண்டு செய்யும் கடப்பாட்டில் நிற்பேன்

இறைவா, நான் உன்னை நூறாயிரம் நாமங்கள் சொல்லிப் போற்றிப் புகழ்கின்றேன். எண்ணற்ற வேண்டுதல்களையும் உடன் இரந்து கேட்கிறேன். ஆனால் நீயோ என் வாய் கூறுவதை எளிதில் கேட்பதில்லை. நீ என்னிடம் கேட்பது என் கைகள். அதாவது நான் கைகளால் செய்யும் கைத் திருத்தொண்டையே நீ விரும்பிக் கேட்கிறாய்.

இறைவா, நான் வாயினால் பேசி என்ன பயன்? என் கைகள் அல்லவா, உழைப்பின் சின்னம். படைப்பின் கருவிகள். இறைவா, நீ நிகழ்த்தும் ஐந்தொழில்களை என் கைகளும் நிகழ்த்தும் இயல்புடையன. ஆனால், இன்று என் கைகள் உண்ணப் பயன்படுகின்றன; அடிக்கப் பயன்படுகின்றன. இறைவா, மன்னித்துக்கொள்.

என் கைகள் உழைப்பில் ஈடுபட்டுக் காய்ப்பேறுக என் கைகள் அன்பினால் அனைவரையும் அரவணைத்திடுக. என் கைகள் அள்ளி வழங்கிடுக. என் கைகள் ஒரோவழி தீமையை அழித்திடுக.

இறைவா, இப்பரிசே எனக்கருளி என் கைகள் தொழிற்பட்டால் உலகம் புதுமை பெறும்! பொதுமை நலம் பெற்று விளங்கும். இறைவா, அருள் செய்க! இந்த உலகு நாள்தோறும் புதுமை பெறத்தக்க வகையில் என் கைகள், தீமை செய்யாமல் பாதுகாத்துக் கொள்ளட்டும். இறைவா, என் கரங்கள் கொடுப்பதைவிட என் உறவினர்கள் கை, எடுத்துக் கொள்ளும் உரிமை பெற்ற கரங் களாக மாறினால் ஒப்புரவுக் கொள்கை சிறக்கும். இறைவா, அருள் செய்க!

இறைவா, உன் குறிப்புணர்ந்தேன். இனி வாயினால் பேசிக் கொண்டு உன் சந்நிதிக்கு வர மாட்டேன். கைத் திருத்தொண்டு செய்யும் கடப்பாட்டில் நிற்பேன். அருள் செய்க!