பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

197






ஜூன் 29


வழி நடைப் பயணம் முழுதும் என்னுடன் வருக, இறைவா!

என்றன் உயிரில் இடம் கொண்ட இறைவா. ஏன் எனக்கு இந்த மயக்கம், கவலை, சொல்? இன்று எனக்கு விடை தெரிந்தாக வேண்டும். இறைவா, என்ன சொல்லுகிறாய்? ஆம், அது உண்மைதான். எத்தனை கோடி இன்பங்கள் வைத்திருக்கிறாய்.

ஆனால், இறைவா, என்மீது சினம் கொள்ளாது கேட்கத் திருவுள்ளம் பற்றுக! பாலுக்குக் காவலாகப் பூனையை வைக்கலாமா? உன்மீதும் குறையில்லை. என்மீதும் குறையில்லை. ஆனால் பொறிகள்-புலன்கள் படுத்தும்பாடு அதிகம். தாங்க முடியவில்லை. ஆம் இறைவா, எந்த ஒன்றையும் முறையாகப் பயன்படுத்துவதில்லை.

எதையும் முறையாகப் பயன்படுத்தினால் அது நல்ல வண்ணம் பயன்படும். ஆனால் என் நிலை என்ன? பொறிகள் என்மீது மேலாண்மை கொள்ளத்தக்க வகையில் எளியனாகி விட்டேன். நொய்ம்மை அடைந்து விட்டேன்.

பொறிகளின்மீது தனியரசாணை செலுத்த முயன்றேன். இல்லை. ஏன் தனியரசு செலுத்தவில்லை? நான் ஆசைகளுக்கு ஆட்பட்டு, ஆளுமையை இழந்து அல்லற்படுகிறேன்.

இறைவா, ஆசைகளினின்று விடுதலை பெற அருள் செய். இறைவா, ஆசைகளை அறுக்க வேண்டாம் என்றா சொல்கிறாய்? அப்படியா? இறைவா, ஆசைகளின் நோக்கத்தை மாற்றச் சொல்கிறாய். அவ்வளவு தானே? இன்று முதல் உறுதி எடுத்துக் கொள்கிறேன்.

இறைவா, எனது ஆசைகள் என்னை நோக்கியனவாக இருக்காது. என்னைச் சுற்றியுள்ள உலகம் பற்றியதாக இருக்கும். இது உறுதி! வாழ்த்தியருள்க! வழி நடைப்பயணம் முழுதும் என்னுடன் வருக!