பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






ஜூன் 30


உழைப்பாளியாக்கி என் வாழ்நாளை ஓங்கிவளரச் செய்க!


இறைவா, கால காலனே, நீ, காலங்கடந்தவன் என்கிறார்களே. உண்மையா இறைவா? நீ, காலங்கடந்தவன் என்றால் காலம் கடத்தும் பழக்கம் உனக்கும் உண்டா? இல்லை. இல்லை! நீ ஒருபோதும் காலம் கடத்துதல் இல்லை. காலதாமதம் செய்வதில்லை.

ஆனால் இறைவா, நீ காலங்கடந்தவன். நீ சாவதில்லை. கால எல்லைகளைக் கடந்தும் வாழ்கிறாய். ஏன் இறைவா, உனக்கு மட்டும் இந்தப் பேறு! நானும் உன்னைப்போல் காலங்கடந்து வாழக்கூடாதா? இறைவா வாழலாம் என்று அருள் செய்கிறாயா? மிக்க மகிழ்ச்சி.

தகுதியுடையனவெல்லாம் வாழும் என்ற ஆப்த மொழி நினைவிற்கு வருகிறது. ஆம், இறைவா, தகுதியுடையன வெல்லாம் வாழும், இன்பத்துடன் வாழும், பெருமையுடன் வாழும், காலங்கடந்தும் வாழும்.

ஆனால், இறைவா, காலங்கடந்து வாழும் உன் தகுதி எங்கே? நான் எங்கே? இறைவா நீ உழைப்பாளி. ஓயாது உறங்காது உழைக்கும் உழைப்பாளி! ஐந்தொழிலை இடைவிடாது இயற்றுகின்றாய்! இயற்கையை ஓயாது இயக்குகின்றாய். ஒழுங்கின்மையும், முறை பிறழ்வும் இல்லாது இயக்குகிறாய். நீ உழைப்பில் மட்டுமா உயர்ந்தவன்? நீ ஒரு பெருந்தகையாளன்.

நானும் தான் உழைக்கிறேன். உழைப்பது போலப் பாவனை செய்கிறேன். ஆத்திரமும் ஆவேசமும் என்னை ஆட் கொண்டுள்ளன. நான் சுயநலவாதி! நான் எப்படி வாழத் தகுதியுடையவனாவேன்? இயற்கைக்கு முரணாக, வாய்ப்பையும் இழந்து வறுமைக்குப் பற்றுக் கோடாக நோய்களுக்குக் கொள்கலனாக வாழ்க்கையைத் தள்ளிக் கொண்டிருக்கிறேன்.

இறைவா, உன் அடிமையை மன்னித்து அருள்க! வாழ் வாங்கு வாழ அருள் செய்க! முதலில் உழைப்பாளியாக்குக.