பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

203



ஜூலை 5


ஒவ்வொரு நாளையும் ஊதியம் தேடும் நாளாக ஆக்கி
அருள் செய்க!

இறைவா, முப்புரம் எரித்த அண்ணலே, சாவு வரத்தான் செய்கிறது. ஒரு மரத்தினின்று பழுத்த மட்டை வீழ்கிறது - இது செத்த பிணம்! பழுத்துக் கொண்டுள்ள மட்டை - இது சாம்பிணம்! இளமட்டை - இது நாளைய பிணம். இது நியதி.

ஆனால், இந்த மரண நிலைகள் என்னை விழிப்படையச் செய்யவில்லை. சில சமயங்களில் பயமடைச் செய்திருக்கின்றன. அதாவது, நாமும் செத்துவிடுவோம் என்ற பயமே! அது கூட அந்தப் பொழுதில்தான். அடுத்த நொடி வழக்கம் போல ஊதியமிலா வெற்று வாழ்க்கை உள்ளிடில்லாச் சுரைக்குடுக்கை போல வாழ்க்கை வறிதே கழிகிறது.

இறைவா, என்னைக் காப்பாற்று. எனக்கும் சாவு வரும் என்பதை உணர்த்து. மரணக் கடிவாயிலில் நிற்கும் ஓர் உயிரே நான் என்பதை உணரச் செய். நாளை எனக்குரியதில்லை. அது யாருக்கும் எதற்கும் உரிமையாகலாம். இன்றைய நாள் நான் வாழும்நாள். என்னிடத்தில் பூரண உரிமையோடிருக்கும் நாள்.

இன்றைய நாளை முழுமையாகப் பயன்படுத்துதல் என் முதற்கடமை. அறிவைத் தேடுதல், ஆள்வினையியற்றல், பொருள் செய்தல், அன்பு காட்டுதல், தொண்டு செய்தல் - இவைகளை நாளை என்று ஒத்திப்போடாமல் இன்றே செய்யும் பாங்கினைத் தா.

இன்றைய நாளை, நான் வாழும் நாளாக, ஊதியம் தேடும் நாளாக ஆக்கி அருள் செய்க! உயிருக்கு ஊதியம் தேடிவிட்டால் செத்தாலும் கவலை இல்லை. இறைவா, அருள் செய்க!