பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

209



ஜூலை 11


குறிக்கோள் நிறைவேற, நீயும் துணை செய்யவேண்டும்.

இறைவா, எந்தை ஈசனே! இன்று நான் பிறந்த நாள். உண்டு, உடுத்து வாழ்ந்திருக்கிறேன். வேறு என்ன செய்தேன்! யாதொன்றும் உருப்படியாகச் செய்யவில்லை.

இறைவா, அறுபான்மும்மை நாயன்மார்கள் குறிக்கோளில் ஒன்றியிருந்தார்கள், உறுதியாக இருந்தார்கள். தங்கள் குறிக்கோளுக்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டார்கள்.

இறைவா, எனக்கு ஏது குறிக்கோள்? சில எண்ணங்கள் உண்டு. இவைகளைக் குறிக்கோளாக ஏற்றுக் கொண்டேனில்லை. ஆதலால், இங்கொன்றும், அங்கொன்றுமாகக் காரியங்கள் நடக்கின்றன. அவை அர்ப்பணிப்பு உணர்விலும் நிகழவில்லை. செய்ய வேண்டுமே என்பதற்காகச் செய்கின்றேன். அதனால் எனது எண்ணங்கள் குறிக்கோள்களாக மாறவில்லை.

என்னிடம் குறிக்கோள்களுக்குரிய உறுதியான செயற்பாடும் இல்லை. ஆதலால் வாழ்க்கை பயனற்றுப் போயிற்று. என்னை மன்னித்துவிடு, இனிமேல் காரியங்கள் செய்கின்றேன். இது வழக்கம்போல் தரும் உறுதியன்று. முன்பு எனக்கு என் எல்லை தெரியவில்லை.

இப்போது எனது வாழும் எல்லை தெரிகிறது! ஆதலால் செயல்களில் அழுத்தம் பிறந்திருக்கிறது. எதையும் விழிப்புணர்வுடன் அணுகுகின்றேன். செய்கின்றேன். திட்டமிடும் குறிக்கோளை நிச்சயமாக அடைவேன்.

ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள். நீயும் துணை செய்ய வேண்டும். கடமைகளின் முனைப்பில் நின்னை மறந்தாலும் நீ என்னை மறக்கக்கூடாது இறைவா, அருள் செய்க!

கு・X・l4.