பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

213



ஜூலை 15


இறைவா, ஊழினை வெற்றிபெற்று வாழும் பெரு வாழ்வினை அருள் செய்க!


இறைவா, ஊழி முதல்வா, நானோ ஊழின் முதல்வனாக நின்றுழல்கின்றேன். இந்த ஊழினிடமிருந்து எனக்கு விடுதலையில்லையா? இறைவா, விடுதலை எடுத்துக் கொள்வதே ஒழிய, ஒருவர் கொடுத்துப் பெறுவதன்று.

ஊழினின்றும் நான் எளிதில் விடுதலை பெறலாமா? முடியும். நான் நினைக்கின்ற நினைப்புக்கள், எண்ணங்கள், நினைப்போடு-நோக்கத்தோடு செய்யும் செயல்கள்-இவைகளைப் பற்றிய நினைவுகள் மிக்க அழுத்தமாய்ப் பதிந்து விடுகின்றன. இப்பதிவுகள் எளிதில் நீக்க இயலாதன.

நினைவுப் பதிவுகளே புற உலகத்தில் எனக்குப் பழக்கங்களாக வருகின்றன. பின் சில நாட்களில் வழக்கங்களாக அமைகின்றன. இப்பதிவுகளே ஊழ். நினைவின் பதிவுகளே பழக்கங்களாகின்றன. வழக்கங்களாகின்றன. நான் பழக்கங்களின் வழியே செல்பவன். பழக்கம் தவிரப் பழகுதலே ஊழின் ஆற்றலை அடக்கும் வழி.

நான் இனி நிறைய காரியங்களைச் செய்வேன். நான் செய்யும் செயல்களுக்கு உள் நோக்கத்தை எடுத்துக் கொள்ள மாட்டேன். அதாவது தன்னல நயப்புடைய - பிறருக்குத் தீங்கு செய்யக்கூடிய உள் நோக்கத்தை எடுத்துக் கொள்ள மாட்டேன். இது உறுதி.

இறைவா, எனக்கு, பணி செய்யும் உள்ளத்தினைத் தந்தருள் செய்க! நினைவாற்றலை நன்மைக்கே பயன்படுத்தும் திறனை அருள் செய்க! நன்றல்லது அன்றே மறந்து விடும் பேருள்ளத்தினைத் தந்தருள் செய்க! பிறர் செய்த நன்மையை என்றும் நினைந்து வாழும் பேற்றினைத் தந்தருள் செய்க!

நான் செய்த நன்றியை எண்ணிப் பெருமிதம் கொள்ளாதவாறு உடன் மறந்துவிடும் தகைமையை அருள் செய்க! நான் ஊழை வென்றுவிடுவேன். இறைவா, ஊழினை வெற்றி பெற்று வாழும் பெரு வாழ்வினை அருள் செய்க!