பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





ஜூலை 26




நான் அறியாமையிலிருந்து முற்றாக விடுதலை பெற அருள் செய்க!

இறைவா, சூரனைத் தடிந்தாட் கொண்டருளிய தலைவா, சூரன் யார்? வேல் எது? சூரனைத் தடிந்த வரலாற்றின் பொருள் என்ன? இறைவா, எனக்கருள் செய்க! சூரன், அறியாமையின் உருவம், புல்லறிவாண்மையின் சின்னம். அறியாமையின் விளைவு அகந்தை. அதனால் “நானே எல்லாம்” - என்ற ஆர்ப்பாட்டம்.

அறியாமையை, அகந்தையை அகற்றுவது அறிவு; நிறை அறிவு; பேரறிவு! அதுவே ஞானம்! இறைவா அறிவு, நிறை அறிவு, பேரறிவு, ஞானம் இவையெல்லாம் என் வாழ்க்கையில் வந்து பொருந்த அருள் செய்க! அறியாமைக் கலப்பில்லாத அறிவே அறிவு!

ஒன்று தெரியும் பிறிதொன்று தெரியாது என்ற நிலை கல்லாமை. அறிவு முயற்சி இன்மை; ஒன்றைப் பிறிதொன்றாக அறிதல் அறியாமை. நன்றைத் தீது என்றும், தீதை நன்று என்றும் முறை பிறழ அறிதல் அறியாமை. நான் அறியாமையிலிருந்து முற்றாக விடுதலை பெற அருள் செய்க!

அறிவு வளர்ச்சியைக் கெடுக்கும் அகந்தையை, அறவே அகற்றி, யாவர்க்கும் தாழ்வாக நடந்திடும் பெற்றியினை அருள் செய்க! தாழ்தல்-தாழ்ந்து போதல் அறிவை வளர்க்கும்; ஆக்கத்தினைத் தரும்.

இறைவா, எனக்குத் தாழ்வெனும் தன்மை அணியாகட்டும். கற்றல், கேட்டல், உற்றறிதல் ஆகிய அறிவு முயற்சி களில் சோர்விலாது ஈடுபட அருள் செய்க!

தெரிய வேண்டியன தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை அருள் செய்க! தெளிய வேண்டியன தெளிந்து கொள்ள அருள் செய்க! வாழ்க்கைக்கு உறுதியென, நோன்பெனக், கொள்வன கொண்டு வாழ்ந்திட அருள் செய்க!