பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

225





ஜூலை 27



ஒப்புரவு வாழ்க்கைக்கு உதவும் கூட்டு வாழ்க்கையே எனக்குத் தேவை!

இறைவா, சூரனைத் தடிந்து அருள் செய்த தலைவா! அன்று ஒரு சூரன் இருந்தான். எளிதில் தடிந்தாட் கொண்டனை. இன்றோ, எண்ணற்ற சூரர்கள். இறைவா, ஏன் இந்த அவலம்? “நான்” என்ற முனைப்பு அகன்றபாடில்லை!

நானோ பலவீனமானவன். எனது வெற்றி பொருந்திய வாழ்வுக்குக் கூட்டாளிகள் பலர் வழங்கப்படுகின்றனர்! ஆனால் கூட்டாளிகள் எளிதில் கூடுவதில்லை. கூடுகிறார்கள், கலைகிறார்கள்! ஏன், இறைவா? “நான்” என்ற அகந்தையை இழந்த தூய சமூக வாழ்க்கையை அருள் செய்.

இறைவா! "நான்” திணிந்த இருள் வழிப்பட்ட ஆணவத்தின் விளைவு. ஒப்புரவு வாழ்க்கைக்கு உதவும் கூட்டு வாழ்க்கையே எனக்குத் தேவை. "நான் வேண்டாம். என்னுடைய பெயர் சாகட்டும். "நான்" அற்ற நிலையில்தான் திருவடி ஞானம் தலைப்படுகிறது.

திருவடி ஞானத்தை எனக்கு அருள் செய்க! "நான்”, "எனது” அற்ற சமுதாயப் பெரு வெளியில் பலரோடும் நட்பும் உறவும் கொண்டு வாழ்ந்திட அருள் செய்க. இனி நான் சமூகத்தின் ஓர் உறுப்பு. இதுவே என் விருப்பம். இறைவா, அருள் செய்க.

கு. x. 15.