பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





ஜுலை 30


நினைக்கண்டறியும் அறிவினைத் தந்தருள் செய்க!

இறைவா, மெய் கண்டதேவன் கண்டுணர்த்திய மெய்ப்பொருளே! "மெய்" என்ற சொல் இன்று அதன் அற்புதப் பொருளை உணர்த்தும் வகையில் வழங்கப் பெறவில்லை. மெய்-உடம்பு, மெய் - மெய்யெழுத்து என்பனவே நான் அறிந்து வைத்துள்ள செய்தி.

மெய்கண்டார் கண்டு காட்டிய மெய்யை நான் உணர்தல் வேண்டும். இறைவா, உணர்த்தியருள்க. அல்லது உணர்த்தக்கூடிய ஆசிரியனைக் காட்டியருள் செய்க. இறைவா, உனக்குப் பொய்ம்மையாகச் சிலர் சேர்த்த பெருமையை மெய்கண்டசிவம் பறித்துவிட்டார், ஆம் இறைவா. நீ என்னைப் படைக்கவில்லை. உயிர்க் குலத்தை நீ படைக்கவில்லை.

இறைவா, நீ என்னைப் படைத்த தலைவனாக இருப்பின் என் குறைகளுக்கு நீயே பொறுப்பு. நான் பொறுப்பற்றவனாகி மனம் போன போக்கில் வாழ்வேன். இறைவா, இல்லை இல்லை! நீ என்னைப் படைக்கவில்லை என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன்.

நானே என் வாழ்க்கைக்குப் பொறுப்பு. எனக்கு வாய்த்திடும் நன்றும் தீதும் பிறர்தர வாரா என்ற தெளிவினைத் தந்தருள் செய்க! நான் என்றும் உள்பொருள். என் பிறப்பு என்பது உலகொடு உறவு கொள்வது. உறவைத் துண்டித்துக் கொள்வது இறப்பு, அவ்வளவு நான்!

நான் என்றும் உள்ளவன் என்று உணர்த்திய உத்தமனே, வினைகள் செய்யும் வாய்ப்புகளை வழங்குக! வினைப்பயன் வந்து சாராமே துலாக்கோல் போல் வாழ்ந்திட அருள் செய்க! அறியாமையை அகற்றி அருள் செய்க! நின்னைக் கண்டறியும் அறிவினைத் தந்தருள் செய்க!