பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

233





ஆகஸ்டு 4



ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நொடியும் திட்டமிட்டுப் பணி செய்ய அருள் செய்திடுக!

இறைவா, ஒருநாள் ஒருபொழுதுகூடத் தடையின்றி, இந்த உலகம் ஓயாது இயங்குகிறது. இந்த உலகம், தோன்றிய நாள் தொட்டு இயங்குகிறது சோர்வு இல்லை. மாற்றங்கள் இல்லை. ஒழுங்கமைவும் கெடவில்லை. இறைவா, என்னே நின் அற்புதம்!

நானோ பிறந்து வளரப் பல ஆண்டுகள் எடுத்துக் கொண்டேன்! அப்பொழுது எல்லாம் தந்தை, தாய், மற்றோர் உதவியுடன் நடந்தேன். வாழ்ந்தேன். நானாக வாழத் தொடங்கிய காலத்திலிருந்து ஒரு நாள் கூட முழுதாக உழைத்தேனில்லை. எட்டுமணி நேரம் என்ற வரையறையில் கூட முழுதாக உழைப்பில் காட்டியதில்லை. எத்தனையோ நாள் வேலைக்கு மட்டம் போட்டிருக்கிறேன்.

இறைவா, நான் கடிகாரம் கட்டியுள்ளேன்! ஆனால் மணியைத்தான் அளந்து பார்த்ததில்லை. கடிகாரம் எனக்கு அணி! நான் சோர்வுபட்டு விழும் வீழ்ச்சிகளுக்குக் கணக்கில்லை. நான் இப்படியே வாழ்ந்தால் உருப் பெற மாட்டேன். என்னைக் காப்பாற்றுக.

காலம் போற்றும் உணர்வினைத் தந்தருள்க! வீழ் நாள்படாமல் வாழ்ந்திட அருள் செய்க! என்னோடு பழகுபவர்களின் அன்பைப் பராமரித்திடும் பண்பைக் கற்றுத் தருக! மற்றவர் ஆலோசனை நல்லதுதான். ஆனால், முடிவெடுப்பதில் மற்றவர் குறுக்கீடு கூடாது.

ஒரு நாள் வீழ் நாளாகப் போனால் அதனால் எண்ணற்ற தீய விளைவுகள் விளையும். இறைவா, என்னைக் காப்பாற்றுக! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நான் திட்டமிட்டுப் பணிகளைச் செய்ய அருள் செய்க!