பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

236

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





ஆகஸ்டு 7



இறைவா, என் வாழ்க்கை ஊக்கம் நிறைந்த உழைப்பின் வழியில் நடந்திட அருள் செய்க!

இறைவா, வானநாடனே! வழித்துணை மருந்தே! இறைவா, நான் உலகில் மேற்கொள்ளும் பயணத்திற்கு உரிய வழியை அறிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். எந்த வழி சுருக்கமானது? பயணத்திற்கு எளிதானது? நலமானது? பயமற்றது? என்றெல்லாம் தெரிந்து கொண்டுதான் பயணம் செய்கின்றேன்.

செல்ல வேண்டிய ஊருக்குரிய பாதையை விட்டு விட்டு, வேறு பாதையை நான் தேர்ந்தெடுத்ததே இல்லை. ஐயப்பாட்டால் வழியில் போவாரிடம்-தெரிந்த ஒருவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டுதான் பயணம் தொடர்கிறது. இது ஒரு பிறப்பில் சில ஆண்டுகள் நடக்கும் பயணத்திற்கு.

இறைவா, ஊழிக்காலந் தொட்டு, உயிர்க்குலம் தோன்றிய நாள் முதலாகத் தொடர்ந்து என் பயணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நெடிய பாதையில் அல்ல, வட்ட வடிவில் அமைந்த வளைவுப் பாதையில் நடந்து கொண்டிருக்கிறேன். நான் பயணம் செய்து சென்று சேர வேண்டிய ஊர் இன்ப ஊர். ஆனால், வளைந்த பாதையில் சென்று பயணத்தைத் தொடங்கி கருவூருக்கே திரும்ப வந்து விடுகின்றேன்! இறைவா, இது என்ன கொடுமை!

அலைந்து எய்த்துப் போய்விட்டேன்! என்னைச் சரியான வழியில் நடத்துக அழைத்துச் செல்க! இறைவா நான் வரும் வழி சரியானதாக அமைந்து விட்டால் போதும்! மற்றெல்லாம் தாமே நடக்கும்; நன்றாக நடக்கும். இறைவா, அருள் செய்க!