பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





ஆகஸ்டு 21



இறைவா! துன்பத் தொடக்கில்லாத இன்ப வாழ்க்கை அருள்க!

இறைவா, பாவநாசா! என் பாவத்தை எப்போது நாசமாக்கி அருள் செய்வாய். இறைவா, பாவனைக்கும், பாவத்திற்கும் உறவு இருக்கும் போல் தெரிகிறதே. ஆம், இறைவா, 'பாவம்' என்பது நன்மையையும் சுகத்தையும் பாவனை செய்து அதுபோலக் காட்டுகிறதே. ஒரு பொய்த் தோற்றம். இதில்தானே நான் ஏமாந்து போகிறேன்.

இறைவா, பாவம் என்பது பாவமாகவே - துக்கமாகவே தோற்றமளித்து என்னை ஆட்படுத்துவதில்லை. பாவம், தொடக்கத்தில் நன்மையாகத் தெரிகிறது, இன்பமாகத் தெரிகிறது! சுகமாகத் தெரிகிறது! பின் விளைவு துன்பமாக இருக்கிறது.

இறைவா, விளக்கொளி, விட்டிலுக்கு விருந்தாகத்தான் தெரிகிறது! தூண்டில் வாய்ப் புழு மீனுக்கு உணவாகத்தான் தெரிகிறது! இளஞ்சூடுடைய நீர் ஆமைக்கு இதமாகத்தான் இருக்கிறது! சொறி சிரங்குடையானுக்குச் சொறிதல் சுகம் தான்! ஆனால், இவற்றின் பின் விளைவு என்ன?

இறைவா, தன்னலம் தொடக்கத்தில் நன்மையாகத் தான் தெரியும்! பதவி சுகம் தொடக்கத்தில் அற்புதம்! அதிகாரச் சுவை தொடக்கத்தில் அபாரம்! ஆனால் இந்தச் சுகங்களிடையே சிக்கி, தேனில் விழுந்த ஈப்போல் ஆனேன்.

இறைவா, துன்பக் கலப்பில்லாத அந்தமில் இன்பமே எனக்குத் தேவை! துன்பத் தொடக்கிலாத இன்பமே என் வாழ்க்கையில் இலட்சியம். இறைவா, அருள் செய்க!