252
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
இறைவா, அன்பே உருவாக அமர்ந்துள்ள அண்ணலே! இறைவா, நான் வேண்டுவது அருள் செய்க. பொன் வேண்டேன். புகழ் வேண்டேன். இறைவா, சில மணித் துளிகள் தனித்து வாழ்ந்திட அருள் செய்க!
இறைவா, நின்னருளின் மாட்சியைக் காட்டும் இயற்கை எழிலின் மடியில் தவழ்ந்து நின்னை அனுபவிக்கும் ஆரா அனுபவத்தினை அருள் செய்க: இறைவா, நான் வேண்டுவது வீடு அன்று! இறவா அன்பே !
அன்பினிலே என் உயிர் கரைந்து விட வேண்டும். அந்த அன்புக் கரைசலில் உன்னை நான் அமுதமெனக் கண்டு அனுபவிக்க வேண்டும். இறைவா, என் உள்ளத்தில் என் வாழ்வைப் புனிதமாக்கும் ஒரு துளி அன்பினை அருள் செய்க!
என் வாழ்க்கை பட்ட மரமாகி விடுமோ என்ற கவலை அரித்து அழிக்கிறது: யாதுமோர் குறைவில்லை! ஆனாலும் என் இதயத்தில் வற்றாத ஊற்றாக அன்பு வேண்டும்.
இந்த வையகத்தை அன்பால் வளர்த்துப் பேண வேண்டும். "அன்பே அன்பே" என்றழுதழுது அரற்றிடுதல் வேண்டும், இறைவா, அருள் செய்க! இந்த அன்பில் இந்த வையகத்தை நனைத்து, பகைக் காளான்களை அகற்றிட அருள் செய்க! அன்பால் என் ஆன்மா பூரித்துப் பொலிவுடையதாகிட அருள் செய்க!
என்னை வருத்தும் ஆணவ வெப்பம் தணித்திடுக. இறைவா, ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த என்னுடைய அன்பே அருள் செய்க. அன்பே சிவமாக அமர்ந்து ஞானத்தவம் இயற்றும் இன்ப நிலையினை அருள் செய்க!