பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

253





ஆகஸ்டு 24



இறைவா, என் இயக்கம் பயன்பாட்டு நிலையில் அமைய இன்னருள் புரிக!

இறைவா, ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே! போற்றி, போற்றி, இறைவா. நீ பெரியோய்! அதே போழ்து எளியோனாகவும் விளங்குகின்றாய்!

இறைவா, பொருளில் பெரியது எது? சிறியது எது? தங்கம் விலைமதிப்புள்ள பொருள்தான். உப்பு, விலை குறைவான பொருள்தான். ஆனால் பயன்பாட்டில் உப்பே சிறந்தது! உப்பு இன்றி வாழ்தல் இயலாது.

இறைவா, நான் தோற்றத்தை-மதிப்பை வைத்துப் பொருளின் தரத்தை நிர்ணயிக்க இயலாது. இறைவா, எல்லாப் பொருளும் பயன்பாட்டுக்கு உரியனவேயாம். இவைகளில் நான் யாதொன்றையும் அலட்சியப்படுத்தக் கூடாது.

வேலைகளில் சிறிய வேலை, பெரிய வேலை ஏது! பயன்பாட்டு நிலையே அளவுகோல்! இறைவா, அருள் செய்க! எல்லாப் பொருள்களையும் பாதுகாப்பாக வைத்துப் போற்றிப் பயன்கொள்ளும் பாங்கினை அருள் செய்க!

இறைவா, எந்த ஒரு பணியும் அதனதன் நிலையில் சிறப்பானதே, பயனுடையதே என்று கருதிச் செயற்படும் வாழ்க்கைப் போக்கினையே அருள் செய்க: இறைவா, அருமை என்பது மதிப்பைப் பொருத்ததன்று. பயன்பாட்டு நிலையே!

இறைவா, நானும்கூட பெரிய நிலையில் இருப்பது முக்கியமல்ல. நான் எளியனாக, பயன்பாட்டு நிலையின் வாழ்க்கையை நடத்தும் இயல்பினை ஏற்று வாழ்ந்திட அருள் செய்க! உலகத்தின் இயக்கம் பயன்பாட்டிலேயே இருக்கிறது. இறைவா, அருள் செய்க!