பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

255





ஆகஸ்டு 26



இறைவா, அமைதி தழுவிய மனம்! உறுதியான மனம்! தெளிவான தீர்மானம்! இவற்றை அருள்க !

இறைவா, மனக்கவலை தீர்க்கும் மருந்தே! நின் அருள் திறத்திற்குப் போற்றி! போற்றி!! இறைவா. கவலை, எனது வாழ்க்கையை அரித்து அழித்துக் கொண்டிருக்கிறது. ஓயாத நச்சரிப்பு!

இறைவா, கவலை போக என்ன செய்வது? இறைவா, ஏன் மெளனம் சாதிக்கிறாய்? இறைவா, என்ன? என்ன? மெளனம்தான் பதிலா? பாடமா? இறைவா, நன்றருளிச் செய்தனை!

கவலைகளை மூட்டை கட்டி ஓரிடத்தில் வைக்க வேண்டும். முதலில் அமைதியாக இருத்தல் வேண்டும். பர பரப்பு, அவசரம், கவலை இவைகளிலிருந்து மனம் விடுதலை பெற்றுவிட்டதா? நல்லது, அமைதி தழுவிய மனம் வந்து விட்டதா? உற்றுக் கவனித்துக் கொள்.

மனநிலையில் பரிபூரண அமைதி கிடைத்தவுடன் சிந்தனை செய்யத் தொடங்கு! கவலைக்குக் காரணமாகிய சிக்கல்களை, சிக்கல்களுக்குரிய காரண காரியங்களை ஆய்வு செய்க!

சிக்கல் தோன்றுவதற்குக் காரணமாயமைந்தவைகளை முதலில் நீக்குக! இதனால் சிக்கல்கள் உடன் மேலாண் மைக்குக் கட்டுப்பட்டு, மேலும் வளர்வது தடைப்பட்டுப் போகும்! சிக்கல்கள் மேலும் வளர்வதற்குரிய சூழ்நிலைகளை இழப்பதின் மூலமே வலிவு இழந்து போகிறது. பின் சிக்கல்களுக்கு எளிதில் தீர்வு காணலாம்! சிறப்புடன் வாழலாம்!

இறைவா, இன்றோடு தொலைத்தேன் என் மனக் கவலையை! நச்சரிப்புகளை விட்டொழித்தேன்! இறைவா! அமைதி தழுவிய மனம்! உறுதியான மனம்! தெளிவான தீர்மானம்! இறைவா, அருள் செய்க!