பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






செப்டம்பர் 2


உழைப்பின் பயனே கூலியென உணர்த்திய உத்தமனே! போற்றி!

இறைவா, பிட்டினைக் கூலியாகக் கொண்டு மண் சுமந்த மாதேவா! போற்றி! போற்றி! எனக்கு நீ அளிக்கும் கூலி மிக மிகக் குறைவு. இறைவா, நின்னிடம் கூலி போதாதென்று இரக்கின்றேன். இரக்கம் காட்டக்கூடாதா?

இறைவா, என்னை நக்கீரர் ஆக்கிவிடாதே! நான் முழுதாக உழைக்கின்றேன். கூலி கேட்கிறேன். உழைப்பை நிர்ணயிப்பது உழைத்த காலத்தின் அளவைக் கொண்டா? உழைத்த உழைப்பின் அளவைக் கொண்டா? அல்லது உழைப்பின் பயனைக் கொண்டா?

இறைவா, நான் உழைக்கின்றேன்! பயன் கிடைக்கவில்லை! நான் உழைத்தது என்னவோ உண்மை! நல்ல நோக்கத்துடன் நன்றாகத் தேர்ந்து தெளிந்து வகைபட அறிவறிந்த ஆள்வினையுடன், உழைத்தால் அதன் பலன் வராமல் போகாது.

ஏதோ, கடனுக்குக் கழித்தால், கடிகார முள் நோக்கி உழைப்பை நகர்த்தினால் பயன் கிடைக்காது! எனக்கு மிகுதியான கூலி கேட்கும் உரிமையே இல்லை. மன்னித்துக் கொள். இறைவா! நன்றருளிச் செய்தனை !

ஒவ்வொரு பூரணத்துவம் வாய்ந்த உழைப்பிலும் இயற்கையாகவே அதற்குரிய கூலி பொருந்தி அமைந்திருக்கிறது. அது தப்பாமல் கிடைக்கும் என்கிறாய். இறைவா, என்னுடைய உழைப்பைப் பூரணத்துவம் உடையதாகச் செய்ய அருள் பாலித்திடுக!

என் உழைப்பை முழுப்பயனுடையதாகச் செய்ய அருள் பாலித்திடுக! என் உழைப்பின் பயனே எனக்குரிய கூலியின் வாயில்! இறைவா, அருள் செய்க!