பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






செப்டம்பர் 6


இறைவா, எனக்கு இயல்பார்வத்தினை அருள்க!


இறைவா! அண்ணலே! எங்கே என, எனைத்தேடி வந்தருள் செய்யும் தேவே! மண்ணில் புகுந்து மானிடரை ஆட்கொள்ளும் ஐயனே! நீ ஐந்தொழில் நிகழ்த்துகின்றனை! ஏன்? நின் ஐந்தொழில் நிகழ்த்தும் ஆர்வம் இயல்பானது. அதற்கு உந்து சக்தியாக எதுவும் இலலை. பயனார்வமும் இல்லை! அது என் போன்றோரை ஆட் கொண்டருள இயல்பாகத் தோன்றிய ஆர்வம், இரக்கம்!

இறைவா, என் வாழ்க்கையிலும் இயல்பான ஆர்வம் தலைப்படின் நான் உய்வேன்; வாழ்வேன். என்னிடம் இயல்பான ஆர்வம் என்று ஒன்றும் இல்லை. "பிழைக்க வேண்டுமே” என்பதற்காக மனம் இல்லாமல் உழைக்கின்றேன்.

இறைவா, என்னைத் தூண்டித் தூண்டி இயக்க வேண்டியிருக்கிறது. என் வாழ்க்கை கேவலமானது. வெட்கமாக இருக்கிறது. இறைவா, மன்னித்து அருள் செய்க! இனி, என் வாழ்க்கையில் இயல்பான ஆர்வத்துடனேயே, வாழ்தல் வேண்டும். அன்பு செய்ய வேண்டும்.

இறைவா, இயல்பார்வத்தில் தோன்றும் இயல்பூக்கம், அளவற்ற ஆற்றலுடையது. என் வாழ்க்கையில் செயற்கை மூச்சு வேண்டாம்! இயல்பார்வம் நிறைந்த நல்வாழ்க்கையை அருள் செய்க! இயல்பூக்கத்தினை அருளிச் செய்து செய்யாதனவெல்லாம் செய்யும் திறனைத் தந்தருள் செய்க!

இயல்பார்வம் என் வாழ்க்கையின் முதல். இந்த முதலை எனக்கருளிச் செய்யின் என்றும் எப்பொழுதும் ஆட்பட்டிடுவேன்! ஓயாது உழைத்தே வாழ்வேன்! இயல் பார்வம் ஆற்றல் மிக்குடையது! இறைவா, எனக்கு இயல் பார்வத்தினை அருள் செய்க!