பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






செப்டம்பர் 14


இறைவா, அன்பெனும் கசிவு கண்டு, காட்டி உதவி செய்க!

இறைவா, கல்லைப் பிசைந்து கனியாக்கும் 'வல்லாளன்' என்று உன்னைப் புகழ்வது பொருந்துமா? இறைவா, என் மனம் கல்லாக இருக்கிறதே! இறைவா, என் மனம் கல்லாக இருந்தால் பரவாயில்லை! கல் வலிமையான பொருள். நின் திருக்கோயில் கட்டுமானத்திற்குக் கல்தானே பயன்படுகிறது!

ஏன் இறைவா? நின்னைக் காண-உறவு கொள்ள உன்னையே கல்லில் தானே சிலையாக வடித்துள்ளோம். இறைவா, என் மனம் இப்படி நல்ல காரியங்களுக்குப் பயன்படுவதில்லையே.

இறைவா, கல் - அதன் நிலையில் பிடிவாதமாக இருப்பதில்லையே. அது பயன்கொள்வார் விருப்பத்திற்கு ஏற்ப வாயிற்படியிலிருந்து உனக்குச் சிலை வடிக்கும் வரை பயன்படுகிறது.

என்னுள் ஏதுமாற்றம்? என்னைப் பயன்படுத்துவோர் யார்? எல்லாம் நானே! எல்லாம் எனக்கே. இறைவா, இத் தகையை கல்மனத்தை நெகிழச் செய்வாயா? அன்பெனும் கசிவு கண்டு காட்டி உதவி செய்க!

இறைவா, நான் அன்பினால் அரற்றி அழவேண்டும். உலகமே என் குடும்பம் ஆக வேண்டும். இறைவா, அருள் செய்க! தன்னலம் மறந்து அனைத்துயிர் நலம் நாடித் தொண்டு செய்ய அருள் செய்க!