பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





செப்டம்பர் 18


வரலாறு எனக்கு ஒரு படிப்பினையாக அமைய அருள் செய்க!

இறைவா, பல்லூழிக்கால வரலாற்றுக்கு உரிமை உடைய நாயகனே! இறைவா, வரலாறும் உன்னைப் போலவே தொன்மையானது. பழமையானது. இந்த வரலாறு நான் படிக்கத் தக்கது இல்லை. படிக்க வேண்டியது, தெரிந்து தெளிய வேண்டிய உண்மைகள் வரலாற்றில் உண்டு.

வரலாறு எனக்குக் கற்றுத் தரும் பிடிப்பினை, எதை எல்லாம் நான் தவிர்க்க வேண்டும் என்பது. இறைவா, வரலாற்று வெள்ளத்தில் நீந்திக் கரையேறியவர்கள் சிலரே; மிகச் சிலரே. ஆனால், இழுத்தெறியப் பட்டவர்களின் எண்ணிக்கை மிகுதி.

இறைவா, வரலாற்றைக் கூர்ந்து நோக்கின் கவிழ்ந்த அரசுகள்-அழிந்த அரசுகள்-கொல்லப்பட்ட அறிஞர்கள் ஆகியோர் தெரிகின்றனர். இறைவா, நான் வரலாறு படித்தால் போதாது. வரலாற்றினை வாழ்க்கையின் படிப்பினையாக ஏற்றுக் கொள்ள அருள் செய்க!

கருணை இல்லாத ஆட்சிகள் ஒழிந்துள்ளன. இரக்க மற்ற அரசுகள் கட்டிய கோட்டைகள் இடிபாடுகளுக்கு ஆளாகியுள்ளன. இறைவா, வரலாற்றைக் கூர்ந்து நோக்கின் அறியாமை, தெளிவின்மை, துணிவின்மை, தனிமுடி கவித்து ஆள்வதற்கெனச் செய்யப்படும் அரசியல் கொலைகள் இன்னோரன்ன தீமைகள் வரலாற்றுப் போக்கில் தள்ள வேண்டியவை.

இறைவா, ஆகாதவற்றைத் தள்ளி ஒதுக்கும் துணிவைத் தா. வரலாற்றின் பயனை வாழ்வுக்கு அருளிச் செய்க. சென்ற கால மனிதர்கள் தோல்வியைத் தழுவியவைகளை அறவே ஒதுக்கிடும் துணிவைத் தா. சென்ற கால வரலாறு எனக்கு ஒரு படிப்பினையாக அமைய அருள் செய்க!