பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருவருட் சிந்தனை

319



அக்டோபர் 29


இறைவா, என்தரத்தை உயர்த்திக் கொள்ளும் இயல்பினை
அருள்க!

இறைவா, வித்தின்றியே விளைவு செய்யும் இறைவா! எனக்கு ஆசைகள் அதிகம். ஆம்! நிறைய பொருள் வேண்டும். ஆம்! பொருள் வேண்டும்.

ஆனால், முயற்சியின்றியே நிறையபொருள் கிடைக்க வேண்டும். அதுவும் நீயே கொடுத்துவிட்டால் முழுநிறைவு. இப்படி என் மனம் எண்ணுகிறது! இது தவறு என்பதை உணர்கிறேன். நடவாதது, நடக்கக் கூடாதது என்பதையும் உணர்கிறேன்.

ஆனால், கடின உழைப்பினை ஏற்க மனம் மறுக்கிறது! இறைவா, என்னைத் திருத்து. எங்குக் கடின உழைப்பில்லையோ அங்குச் செல்வம் சேராது. சேர்ந்தாலும் நிற்காது. என்ற தத்துவத்தை என் வாழ்க்கையின் அனுபவமாக்கும் அறிவினைத் தந்தருள் செய்க!

உழைப்பே தவம்! உழைத்தல் மூலமே உரிமை கால் கொள்கிறது என்ற உண்மைகள் என் வாழ்க்கையின் உண்மைகளாக விளங்க அருள் செய்க!

பொருளைப் போற்றி வாழ்தலினும் என்னுடைய தரத்தை நான் உயர்த்திக் கொள்ளுதல் சிறப்புடையது. இறைவா அருள் செய்க!