பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட் சிந்தனை

325



நவம்பர் 4


என்னை ஒரு சொல்லால் திருத்தி ஆட் கொள்க, இறைவா!


இறைவா! கங்கையைச் சடைக்கரந்தோனே! நீ கங்கை நீரைத் தலையில் வாங்கியது ஏன்? கங்கை வெள்ளம் பகுத்தறிவில்லாதது.


கங்கை நீர் எளிதில் பாய்ந்து பள்ளத் திசையிலேயே சென்று விடும். சென்று சேருமிடத்தின் தூய்மை பற்றி அறியாது. பயன்பாடு பற்றி அறியாது! ஆதலால் நீ தலையில் வாங்கி முறைப்படுத்தி நிலத்தில் விட்டனை!


இறைவா, கங்கைக்கு அளித்த கருணைமிக்க செயலை என் பொருட்டும் நீ செய்தருள வேண்டும்! என் வாழ்க்கை வறிதே பாழுக்கிறைத்ததாகி விடாமல் பாதுக்காக வேண்டும்! பயன்பாடு உடையதாக்க வேண்டும்!


பகுத்தறிவற்ற சடங்குகளில் என் ஆற்றல் பாழாகக் கூடாது! என் உயிரின் ஆற்றல் அனைத்தும் அறிவார்ந்த முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.


அன்பு நிறைந்த செயல்களையே செய்ய வேண்டும்! நின்னை நான் உயிர்க்குலத்திற்குச் செய்யும் தொண்டின் மூலமே காண வேண்டும்.


நடமாடுங் கோயில்களாகிய மானுடரின் உள்ளத்தில் நின்னை எழுந்தருளச் செய்து பூசனை செய்தல் வேண்டும். இந்த அருளைச் செய்தருள்! கங்கையைச் சடையிற் கரந்து தாங்கி அருள் செய்தனை! என் பொருட்டு உனக்கு அவ்வளவு துன்பம் வேண்டாம். நீ என்னை ஒரு சொல்லால் திருத்தி ஆட்கொள்ள முடியும்!


இறைவா, நீ என் வாழ்க்கையின் நெம்பு கோலாக, தூண்டுகோலாக விளங்கி அருள் செய்தால் போதும். நான் வாழ்வேன். வாழ்வாங்கு வாழ அருள் செய்க!