பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

343






நவம்பர் 22


இறைவா, தீதிலா நன்மையே வளரும்படி செய்தருள்க!

இறைவா, தீதிலா நன்மைத் திருவருட் குன்றே! நின் தீதிலா நன்மைக் காட்சியை அடியேனுக்கு அளிக்கக் கூடாதா? தீதிலா நன்மையை நான் என் வாழ்க்கையில் கடைப்பிடிக்கும்படி ஆற்றுப்படுத்தி அருள் செய்யக் கூடாதா?

இறைவா, இன்று என் வாழ்க்கையில் என்னைச் சுற்றிலும் தீதுடைய நன்மைகளே நடைபெறுகின்றன. இல்லை, இல்லை. இறைவா! தீமையை நன்மையென்று கருதிச் செய்கிறேன்.

இறைவா, நான் என்ன செய்ய? தீமை மிகுதியும் உடைய நன்மையையே நான் நன்மை என்று கருதியுள்ளேன். அது மட்டுமா? இறைவா! நீ மற்றவர்களுக்கு அமுதத்தினைக் கொடுத்தாய். நீ நஞ்சை உண்டாய். என் வாழ்க்கையில் தலைகீழ்ப்பாடம்.

நான் மற்றவர்களுக்கு நஞ்சினைத் தருகிறேன். நான் அமுதத்தை விரும்பி உண்கிறேன். இத்தகு தற்சார்பான வாழ்க்கைக்கு "வள்ளல்" பட்டம் வேறு! இறைவா, என்னைக் காப்பாற்று! நான் தீதிலா நன்மையாகிய வாய்மையை ஏற்று ஒழுக அருள் பாலித்திடுக.

என்னைப் போலவே மற்றவர்களும் என்று கருதி அவர் தம் வாழ்வுக்குரிய நன்மைகளை நாடிச் செய்ய அருள் பாலித்திடுக! நன்மை தொண்ணூற்றொன்பது பங்கும் தீமை ஒருபங்குமாக இருந்தாலும் பாலில் நஞ்சு கலந்தாற் போன்றது என்ற அறிவினை எனக்குத்தா. நான் நன்மையை எண்ண அருள் செய்க! நன்மையே செய்திட வாழ்த்தி அருள் செய்க!

இறைவா, நான் தீதிலா நன்மையுடையோனாக-நன்மையே செய்வோனாக வாழ்ந்திட அருள்செய்க! யாண்டும் எங்கும் தீதிலா நன்மையே வளரும்படி அருள் செய்க!