பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

349






நவம்பர் 28


நம்பிக்கை, எனது வாழ்க்கையின் ஆதாரமாகிவிட அருள் செய்க!

இறைவா, நம்பிக்கைக்கு மிகுதியும் உரிய அண்ணலே! உன்னை நம்பியே கைதொழுகின்றேன்! இறைவா, என் நம்பிக்கை பொய்க்குமா? "நம்பினார் கெடுவதில்லை. நான்கு மறைத்தீர்ப்பு” என்பர். இறைவா, வாழ்க்கையை இழுத்துச் செல்வது நம்பிக்கையேயாம்.

ஆனால் நம்பிக்கை என்பது வாழ்நாளின் தொடக்கத்தில்-காலை நேரத்தில் நல்லது. காலை உணவு உடலுக்கு நல்லது. இறைவா, காலை உணவு செரிக்கப் போதிய காலம் உள்ளது. உணவின் பயனாகிய உழைப்பை ஈடுசெய்யவும் இயலும். ஆனால் இரவு உணவோ பயன் குறைவுடையது.

இறைவா, வாழ்க்கையில் காலைப் பொழுதில் கொள்ளும் நம்பிக்கை, காலை உணவைப் போன்றது. மாலைப் பொழுது நம்பிக்கை என்பது இரவு உணவைப் போன்றது; பயன்குறைவானது.

என் வாழ்க்கையில் நம்பிக்கை கால் கொள்ளட்டும். காலை உணவு பயன்படுவதுபோல காலைப் பொழுதில் நான் கொள்ளும் நம்பிக்கை, நாள் முழுவதும் என் வாழ்க்கையே ஆவேசித்து நடத்தட்டும்.

இறைவா, நான் என்னை முதலில் நம்ப வேண்டும். என் ஆற்றலில் எனக்கு நம்பிக்கை வேண்டும். இந்த உலகத்தில் நான், என் வாழ்க்கையில் நிறையச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை வேண்டும்.

நம்பிக்கை எனது வாழ்க்கையின் ஆதாரமாகிட அருள் செய்க! என்னைச் சுற்றி இருப்பவர்களை நான் நம்ப வேண்டும். இறைவா, என்னுடைய வாழ்க்கையின் ஆதாரம் நம்பிக்கையே! இறைவா அருள் செய்க!