திருவருட்சிந்தனை
351
இறைவா, எனக்கு ஏன் இந்த ஆசை! ஆம், இறைவா வெளியில் தலைகாட்டிக் கொள்ள, அதாவது என்னை மிகைப்படுத்திக் காட்டிக்கொள்ள ஆசை! இது நல்லதா?
முந்திரிப் பழத்தில் கொட்டை வெளியே துருத்திக் கொண்டிருக்கிறது! அதனால் பழம் சுவையற்றுப் போய் விடுகிறது! ஒரே காரம்! கொட்டையும்கூட எளிதில் சுவைக்க முடியாத ஒன்று.
மாம்பழத்துக்குள் கொட்டை ஒடுக்கம். அதனால் பழம் சுவையாக இருக்கிறது. கொட்டைக்குள் இருக்கும் பருப்பும் மருத்துவத்திற்கு உபயோகம் ஆகிறது.
உலகின் எல்லா மரவகைகளின் வேர்களும் மண்ணிற்குள் மறைந்துதானே கிடக்கின்றன. ஆனால் மறைந்து கிடக்கும் வேர்களின் தொண்டால் மரங்கள் செழித்து வளர்கின்றன. மனிதகுலத்திற்குப் பயன்படுகின்றன.
இறைவா, எனக்கு ஏன் பெயர்? புகழ்? பெருமை? இவையெல்லாம் வளரும் வாழ்க்கையில் விழும் பூச்சிகளாகப் போய்விடும். வேண்டவே வேண்டாம். இறைவா. எங்கும் நின் புகழே நிலவுக! மற்றவர்கள் புகழே நிலவுக!
எனக்கு அடக்கமாக அமைதியாக இருக்கும் வரத்தைத் தா! பணி செய்யும் பண்பினைத் தந்தருள் செய்க! "என் கடன் பணி செய்து கிடப்பதே". இது என் வாழ்க்கையின் குறிக்கோளாக அமைய வரம் தா! இறைவா, அருள் செய்க!