பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

361





டிசம்பர் 10



கணக்காக வாழ்ந்திட அருள்க!

இறைவா, கணக்கு வழக்கைக் கடந்த நின் திருவடிகளைக் கண்டு தொழ அருள் செய்க! இறைவா, நின் அருள் நிலை கணக்கு வழக்கைக் கடந்தது. நானோ கணக்கினைக் கடக்கவில்லை. கடக்கவும் கூடாது. நான் எதிலும் கணக்காக இருப்பது என் வாழ்க்கைக்கு நல்லது!

இறைவா, எல்லையற்றவை, கணக்குகளைக் கடந்தவையாக இருக்கலாம். நானோ எல்லாவற்றிலும் எல்லைகளை உடையவன் இல்லை. இறைவா! எல்லைகள் இல்லை யானாலும் எல்லைகளை உருவாக்கிக் கொண்டே வாழ்ந்து வருகிறேன்!

எல்லைகளையுடைய சூழ்நிலையில் நான் கணக்கைக் கடத்தல் இயலுமா? ஒருகாலும் இயலாது! நான் இம்மியும் பிழைபோகாது கணக்கோடு வாழ்ந்தால்தான் வாழமுடியும். இல்லையானால் படுதோல்வி வந்தடையும்.

ஒரு வேடிக்கை இறைவா, எங்கள் மனித உலகத்தில் காசு பணத்துக்குமட்டுமே கணக்கு வைக்கின்றனர்! வாழ்க் கையின் முதல், "காலம்" அல்லவா? காலத்திற்கு யாரும் கணக்கு வைப்பதுமில்லை. கேட்டதும் இல்லை! பலநொடிப் பொழுதுகள் கணக்கில்லாததால் பாழாகிப் போகின்றன.

இறைவா, நான் என் காலத்திற்குரிய பணிகளைத் திட்டமிட்டு அளந்து பயன்படுத்தும் உளப் பாங்கினை அருள் செய்க! இறைவா, என் வாழ்க்கையில் அடுத்த முதல் ஆற்றல்! ஆற்றலுக்குக் கணக்கு வைக்கும் பாங்கினை இனிமேலாவது தா!

என் ஆற்றல் கணக்கிடப்பட்டு, பணிகளுக்குத் தகுந்தாற்போலப் பகிர்ந்தளிக்கப் பெற்றால் ஏராளமான பணிகள் நிகழும். என் வாழ்வு கணக்காக அமைந்து கங்காளனாகிய நின்னை அடைய அருள் செய்க! இறைவா, கணக்காக வாழ்ந்திட அருள் செய்க!