பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

360

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





டிசம்பர் 9



இறைவா, ஞானத்தை அருள்செய்க!

இறைவா! 'கற்க' என்று திருக்குறள் சொல்கிறது. நாள் தோறும் கற்கின்றேன். எண்ணற்ற நூல்களைக் கற்கின்றேன். கற்றார் வாய் கேட்கிறேன். ஆயினும் என் இதயம் அடங்கவில்லை.

"நான்” என்ற முனைப்பு முடங்கவில்லை. "எனது” என்ற அகந்தை அடங்கவில்லை. எல்லாம் வேண்டும் என்ற ஆசை மற்றவர்க்கும் வேண்டும் என்ற எண்ணம் இல்லை, கவலை இல்லை! மற்றவர் படுந்துயரம் கண்டு இரக்கப் படுகின்றேன் இல்லை. நான் எப்படி உய்வது?

இறைவா, "கற்பனவும் இனி அமையும்” என்ற ஆப்த மொழியை வாழ்க்கை மொழியாக ஏற்கலாமா? ஆம்! எண்ணற்ற நூல்களைக் கற்கும் முயற்சியினால் மட்டுமே நான் உய்தி பெறல் இயலாது.

இறைவா, அருளையே கண்ணாகக் கொண்டு - கலை ஞானத்தைக் கற்க முயன்றால் எளிதில் ஞானம் சித்திக்கும். இறைவா, "நான்” அடங்க வேண்டும். உன்னுடைய பேருருவாக விளங்கும் மனித சமுத்திரத்துக்குள் சங்கமமாக வேண்டும்.

இறைவா, நீ காட்ட நான் காண வேண்டும். அப்பொழுதுதான் காணாதனவெல்லாம் காணமுடியும். கேளா தனவெல்லாம் கேட்க முடியும். இறைவா அருள் செய்க! நின்னருள் வழியதே என்னறிவு, உணர்வு, செயல், ஞானம் எல்லாம். இறைவா, அருள் செய்க!