பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

370

தவத்திரு குன்றக்குடி அடிகளார்





டிசம்பர் 19



இறைவா, உயிரிரக்கமே என்னுடைய ஒழுக்கமாக அமைந்திட அருள் செய்க!

இறைவா! நான் பக்தி செய்ய ஆசைப்படுகின்றேன். நான் பக்தனாக வேண்டும் என்ற ஆர்வத்தால், நாள்தோறும் உன் சந்நிதிக்கு வருகின்றேன்! வணங்குகின்றேன்! உன்னைப் புகழ்ந்து பாடுகின்றேன்! ஆனால் என் மனத்தில் நெகிழ்ச்சி இல்லை; மனம் உருக மறுக்கிறது? ஏன் அழுவதற்குக்குக் கூட வெட்கப்படுகிறது? ஏன் இறைவா?

அப்படியா, இறைவா! நான் உன்னைச் சுற்றிச் சுற்றித் தான் வருகின்றேன்! இந்த உலகம் உன்னுடையது என்பதை நான் மறந்து விடுகின்றேன்! எல்லா உயிர்களும் உன்னுடைய வடிவம் என்பதை மறந்து விடுகின்றேன்!

அம்மையப்பராகிய நீயே இந்த உலகுக்கு அம்மை யப்பர்! எல்லா இடத்திலும்-எல்லா உயிர்களிடத்திலும் நீ பரவி இருக்கின்றாய். நீ இன்றி ஒன்றில்லை. இந்த உண்மையை நான் அறிந்தும் உணர்ந்தும் ஒழுகுதலே பக்தி.

இதனால் எவ்வுயிரிடத்தும் நான் மாறுபடுதல் கூடாது! பகை கூடாது! இவை சிந்தையிலும் கூடாது. உயிரிரக்கமே பக்தியின் களம்; உயிரிரக்கமே பக்தி,

உயிரிரக்கம் அன்பினைத் தரும், இன்ப அன்பினைத் தரும், அருளைத்தரும். இறைவா! எல்லா உயிர்களிடத்தும் உள்ளத்தாலும் செயலாலும் அன்பாக இருக்கும் அருளைச் செய்வாயாக உயிரிரக்கமே என்னுடைய ஒழுக்கமாக அமைந்து மன நிறைவு பெற்றிட அருள் செய்க!