பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

371





டிசம்பர் 20



"சத்து-சித்து-ஆனந்தம்” சச்சிதானந்தமே! நின்னருளே துணை! அருள் செய்க!

இறைவா! என்னுடைய அன்பே! இன்பமே! நான் இன்பத்தை விரும்புகின்றேன்; எல்லையற்ற இன்பத்தை விரும்புகின்றேன். இன்பம் என்ன? வாங்குவதற்குக் கடைச்சரக்கா? இல்லையே!

இன்பத்தின் வாயிலாகிய சத்தியத்தை-உண்மையை நான் பற்றினால்தானே இன்பம் கிடைக்கம். சத்தியம்உண்மை இன்பத்தின் ஊற்றுக்களன்! நான், மனம், மொழி மெய்களால் உண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அகமும்-புறமும் ஒத்து வாழ வேண்டும் இறைவா அருள் செய்க! அறிவு தேவை. உலகம் வளர்கிறது! நானும் வளர்கிறேன். வளர்ச்சி நிலைமைகளுக்கு ஏற்ப அறிவும் வளர வேண்டாமா? வளர வேண்டும்.

அறிவு தேடும் வேட்கை தேவை. நூலறிவு, செவியறிவு, பட்டறிவு மூன்றும் தேவை! இறைவா! இந்த அறிவை அயர்வின்றித் தேடிப் பெறும் உணர்வினை வழங்கி அருள்க!

உண்மையும் அறிவும் என் வாழ்க்கையில் இடம் பெற்றால்தான் ஆனந்தத்தினை அடைதல் கூடும். இந்த மெய்ப் பொருளை விளக்கத்தானே. இறைவா, சத்து-சித்துஆனந்தம் (சச்சிதானந்தம்) என்ற பெயர் பெற்றனை!

இறைவா, நான் உனையடைந்தேன்! சத்திய வேட்கையைக் கொடு! அறிவை நல்குக! இன்ப அன்பாக என்னிடத்தில் நின்றருள் செய்க: இறைவா! சச்சிதானந்தமே! நின்னருளே துணை! மகிழ்ந்து மன நிறைவு பெற்றிட அருள் செய்க!