பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






பிப்ரவரி 1


இறைவா, இப்பிறப்பை முழுதாக வாழ்ந்திட எனக்கருள்க!

இறைவா! உன்னைப் பற்றிப்பலர் புகழ்ந்து கூறியுள்ளனர். கூர்ந்து கவனித்தால் அந்தப் புகழ்ச்சியனைத்தும் உண்மைதானா என்ற ஐயம் தோன்றுகிறது! சில மனிதர்களே போதும் உன்னுடைய தகுதியின்மையை விளக்க! சிலரை நீ உண்ணவும் உறங்கவும் என்றே படைத்தாயா? அவர்களிடம் உன் அறிவுரைகள்-உபதேசங்களை விட பரம்பரையாக வந்த குணத்தின் ஆற்றலே கூடுதலாக இருக்கிறது! அவ்வளவு தான்! பழைய பழக்கப் பைத்தியம் திடீர் என்று தெளியாதே! மெள்ள மெள்ளத்தான் தெளியும்! ஆனால், அதுவரையில் உலகம் காத்திருக்குமா? காத்திருக்காது! இப்பிறப்பை நான் முழுதாக வாழவே ஆசைப்படுகிறேன். அதுவரையில் அந்தக் காலனை ஒதுங்கி இருக்கச் சொல்! நான் விரைந்து முன்னேற முயற்சி செய்கின்றேன்! இறைவா! என் ஆசைகள் கூட உன்வழியில் தான். பேச ஆசைப்படுவதில்லை; கேட்கவே ஆசைப்படுகிறேன்! விளம்பரம் விரும்பவில்லை; வேலைகளையே விரும்புகின்றேன்! ஓய்ந்திருக்க விரும்பவில்லை! ஓயாது உழைக்கவே விரும்புகிறேன்! சண்டை சச்சரவுகளில் விருப்பம் இல்லை; சமாதானத்தை விரும்புகின்றேன்! ஆதலால் இறைவா! என்னை நம்பு! உன் புகழ் என்னால் குறையாது! வளரும்! ஏன்? உன் வேலைகளில் பங்கு பெறுவேன். இது உறுதி.