பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

75




பிப்ரவரி 28


வழி நடத்தி வாழ்வித் தருள்க!


ஆண்டவனே! உன் பெயரே "ஆட்கொண்டவன்" என்று இறந்த காலத்தில் இருக்கிறது. அப்படியிருக்க, நீ ஆட்கொண்ட எனக்கு ஏன் பிறப்பு, இறப்பு-இந்த வேலையெல்லாம். ஆண்டவா என்ன சொல்கிறாய்? என் பிறப்புக்கும், இறப்புக்கும் நீதானே காரணம்? என் அறியாமை, செயலின்மை, தன்னலம் துறவாமை, ஆகியனதான் பிறப்பிற்குக் காரணங்களா?

ஆம், ஆண்டவா யோசித்தால் தெரிகிறது, என் முட்டாள்தனம். ஆனால் படித்தவனாக வெளிச்சம் போடுவதில் எனக்கு ஈடு யாரும் இல்லை. எனக்குச் சோம்பலே-சுகம். அம்மம்ம! ஆண்டவா என் உடம்பு என்னை எவ்வளவு கெடுத்திருக்கிறது தெரியுமா? இந்த உடம்புதான் தன்னலத்தையே வளர்க்கிறது. உடம்பு பெருத்து உயிராகிய நான் சிறுத்துவிட்டேன். ஆண்டவா, என்பிழையை உணர்ந்தேன்; தெளிவு பெற்றேன்! இனி நீ ஆட்கொள்ளத்தக்க நிலையில் வாழ்வேன், உறுதி, நீயும் வழிநடத்து. வாழ்வித்தருள் செய்!