பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13


1. வெஃகாமை வேண்டும் பிறன் கைப்பொருள்
2. பழி மலைந்து எய்திய ஆக்கம்
3. தாழ்விலாச் செல்வர்
4. தீதின்றி வந்த பொருள்

இத்தொடர்கள் உணர்தற்குரியன.”

“சமயவாழ்வு இருவகையில் சிறத்தல் வேண்டும் என்பர் திருவள்ளுவர். 1. இறைவழிபாடு 2. பொய்தீர் ஒழுக்க நெறி நிற்றல்.”

“மெய்ப்பொருளார் பொறுத்தாற்றும் பண்பினராய் வாழ்ந்தார். சண்டிகேசுவரர் ஒறுத்தாற்றும் பண்பினராய் வாழ்ந்தார். இருவரும் போற்றத் தக்கவரே. காரணம், முன்னையவர் தன் சார்பில் நேர்ந்த கேட்டைப் பொறுத்தார். பின்னையவர், ஓர் இனத்தினுடைய பண்பாட்டு நாகரிகத்தைக் கெடுக்கின்ற கேட்டை ஒறுத்தார். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வழிபாட்டுக்கென்று பயன்படுகின்ற மூர்த்தியை, அந்த வழிபாட்டுச் சடங்கைக் கீழ்ப்படுத்தியதால் சண்டிகேசுவரர் வெகுண்டார்” என்பது அடிகளாரின் திருவுள்ளமாகும்.

நாவரசர் பொறுத்தாற்றியதும், ஞானசம்பந்தர் ஒறுத் தாற்றியதும் அடிகளாரின் சிந்தனையோடு ஒப்பிட்டு மகிழ்தற்குரியன அன்றோ?

“கூற்றம் குதித்தலும் கைகூடும்” என்ற திருக்குறளுக்கு, மார்க்கண்டேயர் வரலாற்றை அடிகளார் நினைவு கூர்ந்த சிந்தனை அரியதாகும்.

இனைய பல அரிய சிந்தனைகளையும், திருக்குறள் அமைப்பு முறைகளையும் விளக்கி இருக்கும் குருமூர்த்திகள்; பிளேட்டோ, அரிஸ்டாட்டில், சாணக்கியர் போன்ற பல அறிஞர் பெருமக்களின் கருத்துக்களையும் ஆங்காங்கு ஒப்பிட்டுக் காட்டியிருக்கும் திறம் அரியதாம்.

இக்குருமூர்த்திகள் தம் அரிய கருத்துக்களை, ‘யாதானும் நாடாமால் ஊராமால்’ எனக் கூறுதற்கு ஏற்ப, உலகெங்கும் சென்று வழங்கி வந்தவர்கள். அவை என்றும் நிலைபெறுதற்கென நூல் வகையானும் வரவேண்டுமெனத் திருவுளம் கொண்டு, அருள் பாலித்திருக்கும் குருமூர்த்திகள் தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். அவர்களின் திருக்கருணையையும், பதிப்புச்செம்மலாய் விளங்கிவரும் அரிய இனிய அன்பராய ச. மெய்யப்பனார் அவர்களையும் போற்றியும் வாழ்த்தியும் மகிழ்கின்றேன்.