பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருஞானசம்பந்தர் ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்திற்குக் கிடைத்த ஒப்பற்ற அருளாளர்; உள்ளுணர்வுகளையும் இயற்கை எழில்களையும் கவிதைகளாக்கித் தந்த கவிஞர். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய தமிழர்.

தமிழர் நாகரிகம் அகனைந்திணை ஒழுக்கத்தின்பாற்பட்டது. ஒருவனோடு-ஒருத்தி கூடி வாழ்கின்ற அறவாழ்வே தமிழர் வாழ்வு. இத்தகு வாழ்க்கைக்கு மாறுபட்ட பாலைவன வாழ்க்கையைத் தமிழகத்தில் நிலைநிறுத்தச் சமணர்கள் முயன்றனர். மேலும், தமிழ் இசைத் தமிழ் இறைவனை ஏழிசையாக- ஏழிசையின் பயனாகப் பார்ப்பவர்கள் தமிழர்கள். திருஞானசம்பந்தர் ஏழிசைத் தந்தையாக விளங்குகின்றார். “கானத்தின் எழுபிறப்பை” என்றார் சேக்கிழார் அடிகளும். சமணர்களோ பண்ணோடு இசைகேளாத நெறியைத் தமிழகத்தில் பரப்ப முயன்றனர்.

இயற்கை, இறைவனை அனுபவிக்கும் பள்ளிக்கூடம். “வண்ணமலரும் நீ”, “பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி” எனவரும் அருளாளர்களின் சிந்தனை நினைவில் கொள்ளத் தக்கது. திருஞானசம்பந்தர் தமது தேவாரப்பாடல்களில் இயற்கையின் எழிலோவியத்தைச் சித்திரமாக்கியுள்ளார். இங்ஙனம் தமிழர் தமிழ் நாகரிகத்திற்கு-அந்த நாகரிகத்தின் நிலைக்களனாக விளங்கும் சமயத்திற்குத் திருஞானசம்பந்தர் போராடினார். ஆனால் திருஞானசம்பந்தர் விவாதத்துறையில் வெற்றி பெறவே திருவுளம் கொண்டார். சமணர்களோ விவாதத்தில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இன்மையின் காரணமாக - கொல்லாமை நோன்பு கொண்டொழுக வேண்டிய சமணர்கள் பலாத்கார வழியில் திருஞான சம்பந்தர் தங்கியிருந்த மடத்துக்குத் தீயிட்டார்கள். தீயிட்டதின் பரிசைப் பெற்றார்கள்! இல்லை, பரிசைத் தாமே ஏற்றார்கள் என்பதே வழக்கு. இங்கனம் இருக்க அதை எப்படிச் சமயச்சண்டை என்று கருதுவது?