பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொடியா? கொம்பா?

271


அகவாழ்வொடு இணையாத-பிணையாத சமயநெறி சோளக்கொல்லைப் பொம்மையைப் போன்றதேயாகும்.

யார் யாரணம்?

சமயத்தால் நாட்டில் பல சண்டைகள் ஏற்பட்டன என்று குற்றம் சாட்டினார்கள். சமயத்துறையில் மட்டுமா சண்டைகள் அரசியலிலும் சண்டைகள்தானே! வரலாற்றை உண்மையாக ஆராய்ந்தால் அவ்வப்பொழுது நிகழ்ந்த அரசியற் சண்டைகளே சமயச் சண்டைகள்போலப் பேசப் பெற்றுள்ளன. காரணம் மக்களிடையே சமய நம்பிக்கை சிறந்து விளங்கியதன் காரணமாகச் சண்டையிட்டவர்கள் மக்களிடம் ஆதரவைத் திரட்டுவதற்காகச் சமயச் சண்டை என்று சொல்லிக்கொண்டார்கள்.

சம்பந்தருக்கும் சமணர்கள் கழுவேற்றத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை உறுதியாக அறிவிக்கிறோம்.

அங்கும் அரசியல் மோதலே! அடிப்படை அரசியலேயாம்! திருவருளே என்னத் திகழ்ந்த திருஞானசம்பந்தர் பொறுப்பல்லர் வழிவழியாகச் சிவநெறியில் நின்றொழுகிய மன்னனைச் சமணனாக ஆக்கிப் பாண்டிய நாட்டாட்சியைக் கைப்பற்றி ஆட்சிச் சமயமாகச் சமணநெறியை ஆக்கலாம் என்ற கருத்துடன் சமணர்கள் மன்னனைச் சமணனாக்கினார்கள். தன்னாட்டுக்கு உரிமை உடைய தனக்கு உரிமை உடைய சிவநெறியை விட்டுச் சமணநெறியைச் சார்ந்ததைத் திருஞானசம்பந்தரால் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியும்?

திருஞானசம்பந்தர் தமிழகத்தின் நாகரிகத்திற்காக- பண்பாட்டிற்காக உரிமைப் போராட்டம் நடத்தினார். அறியாதார் திருஞானசம்பந்தரை ஒரு சமயவாதியாக மட்டுமே பார்ப்பார்கள். அப்படியல்ல!