பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

346

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



2. தமிழும், சமயமும், சமுதாயமும்


அன்புக்கும் பாராட்டுதலுக்கும் உரிய அருமை நண்பர் சண்முகவேல் அவர்களே! பெரியோர்களே! நண்பர்களே! சகோதரர்களே! சகோதரிகளே! இரண்டாவது சுற்றாக, கடல் கடந்து வாழ்கின்ற உங்களைப் பார்க்கவும், கலந்து பேசிப் பழகவும், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், துணை செய்த திருவருளுக்கும், அந்தத் திருவருளுக்குக் கருவியாக நின்ற மகாமாரியம்மன் கோயிலைச் சேர்ந்த ஆலய நிர்வாகிகளுக்கும் ஏனையோருக்கும் என்னுடைய நன்றி, பாராட்டு! வாழ்த்துக்கள்!

பேரவையின் செயலாளர் அருமைக்குரிய நண்பர் பெருமாள் அவர்கள், பல நல்ல செய்திகளை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள். நான் இப்பொழுது அந்தச் செய்தியில் நுழைய விரும்பவில்லை. கடைசியில், முடிக்கிறபொழுது நேரமிருந்தால், காலமிருந்தால், அதைத் தொடலாம் என்று நினைக்கிறேன். ஆனால், அவருடைய பேச்சிலிருந்து சில தலைப்புகளை மட்டும் எடுத்துக் கொள்கிறேன். காரணம், சில தலைப்புகளைத் தொடர்ந்து விளக்கினால், சில ஒளி பொருந்திய செய்திகள் நமக்குக் கிடைக்க முடியும் என்ற நம்பிக்கை பொதுவாக, என்னுடைய நல்லூழோ அல்லது எப்படியோ, எனக்குத் தெரியாது, என்னைப் பாராட்டுகிறவர்களிலேயே சில எதிரிகள் இருப்பார்கள். அவர்களுடைய நோக்கம் என்னைப் பாராட்ட வேண்டும் என்பதுதான். ஆனால், அந்தப் பாராட்டுரைகள் மற்றவர்களுக்கு, அதாவது என்னுடைய எதிர்ப்பாளர்களுக்கும் தீனியாக அமையும். நண்பர் பெருமாள் அவர்கள் அந்தத் திருப்பணியை இன்றைக்குச் செய்திருக்கிறார்கள். அதுவும் நண்பர் சண்முகவேல் அவர்கள்-அவருடைய வீட்டில் வைத்துச் சொன்ன பிறகும் கூட-அதை அவர்கள் செய்திருக்கிறார்கள்.