பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈழத்துச் சொற்பொழிவுகள்

401


சுந்தரர் பெருமையைச் சொல்லமுடியாது. இறைவனின் திருவாயால் “மேருவரையின் மேம்பட்ட தவத்தான்” என்று புகழப்பட்டார். கல்வியில் மேம்பட்ட சுந்தரர் எல்லாவற்றுள்ளும் இனிய கடவுளை, “கற்ற கல்வியினும் இனியான்” என்றும், “பண்ணிடைத்தமிழ் ஒப்பாய்” என்றும் வாழ்த்தினார். என்னே அவர் செந்தமிழ் ஆர்வம்! அவர் ஆராய்ச்சித் திறம் இக்கால வரலாற்று ஆராய்ச்சியாளரையும் பிரமிக்கச் செய்கின்றது.

சுந்தரரது காலம் சமயத்துக்கு மதிப்பளித்த நல்ல காலம்; ஆனால் சமயத் தொண்டர்கள் நலிந்து வாடிய காலம். இன்றோ சமயத் தொண்டர்கள் நன்றாகத்தான் இருக்கிறோம். ஆனால் சமயத்துக்குத்தான் நல்லநிலை இல்லை. சூழ்நிலை இப்படி மாறியது வருந்தத்தக்கது. சூழலைமாற்ற-உருவாக்க மனிதனால் முடியும். ஆகவே, பொன்கேட்டு, பெண்கேட்டு, கண்கேட்ட சுந்தரரின் காலத்துச் சமயநிலையை உண்டாக்க நாம் உழைப்போம் என வேண்டி-வாழ்த்தி விடை பெறுகிறோம்.


பதுளையில்


இந்த உலகிலே எதையும் இழக்கலாம் - மறக்கலாம். ஆனால் தாய்மொழியை இழக்க இயலாது; மறக்க முடியாது. தன் சொந்த மொழியை இழந்து மறந்து பிறமொழிப் பற்றுக் கொண்டு வாழ்தல் பொய்க்காலில் நடப்பதற்குச் சமமாகும். எந்த இனமும் தத்தம் மொழியைப் பேச - பேண முன்வருவது போலவே தமிழர்களாகிய நாமும் முன் வரவேண்டும். தமிழ் உணர்வுகொண்டு, தமிழ்ச்சிந்தனையால் தமிழ் நாகரிகம் காக்க வேண்டும். எல்லாத் துறைகளிலும், எல்லாக் கட்டத்திலும் தமிழ் வாழ்வு வாழ விருப்பங்கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் தமிழ்வழி நல்லோர்களாய், தண்டமிழ்ச் சிறார்களாய்ச் சிறக்கமுடியும்.