பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஈழத்துச் சொற்பொழிவுகள்

427


வற்புறுத்துகிறார். காற்றை நாம் சுவாசிப்பதனால் காற்றுக்கு என்னபயன்? நாம்தான் பயன் பெறுகிறோம்? சோற்றை நாம் உண்பதால் சோற்றுக்கு என்னபயன்? நாம் தான் பயனடைகிறோம். இவற்றைப்போலவே கடவுளை வணங்குவதால் நாமே பயன் பெறுகின்றோம். உயர்ந்த எண்ணத்தால் வரும் பரம்பரையே குலமாகும். இக்குலத்தை நாம் விரும்புகின்றோம். அதைக்கூட உயர் நிலைப்பட்டோர் கை விடுவர். ஆதலால் எண்ணம் உயர்ந்ததாகவும் தூயதாகவும் இருப்பதற்குக் கடவுள் வழிச் செல்லல் இன்றியமையாதது.

மனிதகுலம் சுதந்திரமாகச் சுற்றிச் சுழன்று திரிய ஆசைப்படுவதில் வியப்பில்லை. எல்லா இனத்தவருடனும் இணைந்து - பிணைந்து வாழ்வதிலும், உரையாடுவதிலும் உவகை கொள்கிறது மனித இனம். இந்தச் சுதந்திர நோக்குக்கும் முட்டுக் கட்டையாக - தடையாக எது குறுக்கிடுகிறதோ அதை அகற்றி அழிக்கவேண்டுமென்ற வேட்கை உண்டா கின்றது. மனித மேம்பாட்டுக்கும், சமுதாய உயர்வுக்கும் உகந்த சில கருத்துக்களையும் நடை முறைகளையும் யாராவது தடுத்தார்களானால் அத்தடையை நீக்க முயற்சிப்பது தன் கடமையென மனிதன் காலப்போக்கில் உணர்ந்து வந்திருக்கிறான். அத்தகைய உணர்ச்சியின் உந்தல்தான் சுதந்திரப் பற்றை அவனுக்குக் கொடுத்திருக்கிறது. தமிழினம் சுதந்திரத்தைப் பேணிக்காப்பதில் முன்னின்று உழைத்திருக்கிறது. விரிந்த - விசாலமான மனப்பான்மை தமிழினத்துக்கு இருந்தது போலவே, சுதந்திரம் காக்கும் உணர்வும் இருந்தது. நீங்கள் வாழும் ஊர் எவ்விடத்திலுள்ளது? என்று அன்று கேட்டால் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பதில்தான் வரும். அவ்வளவு தூரத்துக்கு அகன்ற நெஞ்சு அப்போதிருந்தது. தன்னைப்போல் பிறரை நேசித்து, தன் நாட்டைப்போலப் பிறநாட்டையும் எண்ணி எல்லாரும் ஒரு குலம், எல்லாரும் ஓர் இனம் என்றபடி வாழ்தல்தான்