பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இறவாத இன்ப அன்பு நிலையை எய்தி அமைதி பெறுவதிலேயே நிறைவு பெறுகிறது. மார்க்சியம் மனித உயிர், தொழில் செய்வதன் மூலமே தனது அறிவை விரிவுபடுத்திக் கொண்டு பரந்த பூத பெளதிக உலகத்தின் செல்வங்களை யெலலாம் மானிடசாதியின் அனுபவத்திற்குக் கொடுப்பதில் முனைப்புடன் ஈடுபடுகிறது; அது மட்டுமன்று. காலத்தையும் தூரத்தையும் இயற்கையாற்றல்களையும் வென்று விளங்கும். சாதனையைச் செய்வதாகக் கூறுகிறது. இரண்டு தத்துவங்களும் செல்லும் அறிவுவழியின் இலக்குகள் மாறுபட்டிருக்கின்றன. இரண்டும் தேவையே. ஆனால் மார்க்சியம் காட்டும் அறிவுலகம் முதல்நிலையில் வெற்றி பெற்று அவ்வெற்றியின் முடிவில் - சைவ சித்தாந்த ஞானம் காட்டும் இன்ப அன்பில் வந்து தங்குமானால் மானிட - வரலாற்றுக்குப் பெரும் பேறாகும்.

கடவுள் தன்மை

மார்க்சியம், மனிதனை விஞ்சிய ஒரு பொருள் இருப்பதாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

“மக்கள்தான் முக்கியமான முதன்மையான ஆக்க சக்தி;

படைப்பாளி, வரலாற்றின் உண்மையான அகப்பொருள்”15

என்பது மார்க்சியம்.

சைவ சித்தாந்தம் கடவுளை, மனிதனைவிடச் சிறந்த பொருளாகக் கொள்கிறது. ஆனால், உயர் பொருளாக இருக்கிற கடவுள் மனிதனைக் கொத்தடிமைப்படுத்துவது அல்லது உயிர்களிடத்தில் தற்குறை மனப்பான்மையைத் தோற்றுவிப்பது உயர் மனப்பான்மையல்ல. இயல்பான வளர்ச்சியில் கூட வேற்றுமைகள் இருப்பது இயற்கை; இதற்கு மார்க்சியம் உடன்படுகிறது. கடவுளை மனிதனுக்கு வழிகாட்டும் ஆசிரியராகவும் தோழனாகவுமே சைவ சித்தாந்தச் சமயம் கருதுகிறது. மனிதருள் சிறந்த மனிதர் இருப்பதில்லையா?