பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பேரமைப்பிலிருந்து மனிதன் தனித்து ஒதுங்குவது பஸ்மாசுரன் கதையை ஒத்ததாக முடியும். எண்ணற்ற கோடிக் கணக்கான நீர்த்திவலைகளின் செறிவில் கடல் கிடக்கும்பொழுது, நீர்ப்பரப்பு மிகுதியாக இருக்கிறது; ஆர்ப்பரிக்கிறது! ஆழ் கடலின் வயிறு, முத்தை ஈன்று தருகிறது! தண்மையான காற்றால் உயிர்க்குலத்தைத் தழைக்க வைக்கிறது! கடல்படு செல்வம் அள்ள அள்ளக் குறையாதது! அந்த ஒப்பற்ற மாபெரும் கடலிலிருந்து ஒரு திவலை நீர் கரையில் விழுமானால் அத்திவலை என்னாகிறது! கரையில் விழுந்த சில நொடிகளிலேயே காய்ந்து போகிறது. அதுபோல, நாம் மானிட சாதியின் ஓர் உறுப்பாக இருக்கிறபோது நமது வாழ்க்கையில் பெருமை ஏற்படுகிறது! பாவேந்தர் பாரதிதாசனும்,

“என்குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்
அறிவை விரிவுசெய்! அகண்ட மாக்கு!
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு!
மானிட சமுத்திரம் நானென்று கூறு”33

என்று பாடினான்.

பெண்ணுக்குப் பெருமை சேர்க்கும் தத்துவங்கள்

இந்தச் சங்கம வாழ்விற்கு நுழைவாயிலாக அமைவது குடும்பம். பெண் வாழ்க்கைத்துணை வாழ்க்கைத் துணை நலம்! பெண்களைப் பெருமைப்படுத்துவதே சித்தாந்தத்தின் நோக்கம். சிவபரம் பொருளின் அருளே, சக்தி என்பது.

“அருளது சக்தியாகும்”34

என்பது சிவஞான சித்தியார். மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் யாண்டும் இறைவனை அம்மையப்பராகவே போற்றிப் பரவுவதைக் காணலாம். சித்தாந்தச் செந்நெறியின்