பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

141


அனுபவத்தின் எல்லையில் நம்முடைய வாழ்க்கை தொடங்குகிறது. அதனால் நம்முடைய வாழ்க்கைப் பயணம் எளிதாகும். இத்தகு நூலறிவு பெறுதலுக்கும் செவிவழி அறிவு பெறுதலுக்கும் நாம் எவ்வளவு தொகை செலவழிக்கிறோமோ அதைப் போலப் பலமடங்கு திரும்பப் பயன் கிடைக்கும். இவ்வாறு பல நூல்களைக் கற்கின்ற வாய்ப்பை இயல்பிற் பெறாது போனாலும் கற்றோர் வாயிலாகக் கேட்டு அறிந்து கொள்ளும் அறிவு இன்னொரு வகை அறிவு. “கற்றிலன் ஆயினும் கேட்க!” என்பது வள்ளுவம்! இங்கனம் அறிவினைப் பெறும் வாயில்கள் பலப்பல. அறிவின் துறைகளும் பலப்பல. அறிவின் வழிச் செல்பவன் வாழ்க்கையை மகிழ்ச்சி நிறைந்ததாக ஆக்குவான். அறிவின்றி உணர்ச்சி வசப்பட்ட வாழ்க்கைப் போக்கு துன்பியலாக முடியும். இதனாலேயே “அறிவு அற்றம் காக்கும் கருவி” என்றார் திருவள்ளுவர். இத்தகைய அறிவு நலன்கள் அனைத்தையும் பெறுவதற்குத் தொடர்ச்சியான முயற்சி தேவை. நல்லறிவானது எங்கே எவ்வளவு தொலைவிலிருந்தாலும் அதைத் தேடிச் சென்று அடைய வேண்டும்.

“எனைத்தானும் நல்லவை கேட்க; அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்”

என்பது திருக்குறள். எனவே வளமான வாழ்க்கைக்கு அறிவே முதல்.

“அறிவுடையார் எல்லாம் உடையார்” என்று வள்ளுவம் கூறும். எல்லாம் - என்னென்ன? வளமான வாழ்க்கைக்குப் பதினாறு பேறுகள் வேண்டும் என்பது வாழ்வியல் கண்ட முடிவு. அந்தப் பதினாறு பேறுகள் என்னென்ன? புகழ், கல்வி, வலி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அழகு, அறிவு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் ஆகியனவாம். வளமான வாழ்க்கை அமைய இப்பதினாறும் தேவை. இவை அடைய