பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

307


சொல் கடவுட் சார்புடைய கொள்கையை மட்டுமே குறிக்கிறது.

ஒரு மனிதன், பிறிதொரு மனிதனின் நலத்தைக் கைப்பற்றாததே அறம். ஒரு மனிதனின் நலம் பிறிதொரு மனிதனின் நலத்தோடு மோதாமல் ஒதுங்கி வளர்வதே நேர்மை. ஒரு மனிதன் பிறிதொரு மனிதனின் உரிமைகளை உணர்வுகளை மதித்து நடப்பதே சிறந்த மத ஒழுக்கம். இதுவே மதநெறியின் தொடக்க காலச் சீரிய இயல்பு.

காலப் போக்கில், மதம் மனிதர்களின் உரிமைகளுக்கு அரண் செய்வதற்கு மாறாக, வன்முறையாளர்களுக்கே கை கொடுத்தது. இதன் விளைவாகச் சாதிகள் தோன்றின; பொருளியல் ஏற்றத் தாழ்வுகள் மலிந்தன.

எல்லார்க்கும் பொதுவாம் மன்றுள் நடமாடும் இறைவன் திருமுன்னும், சாதியே ஆட்சி செய்தது; இன்னும் ஆட்சி செய்கிறது. சுரண்டும் மனப்பான்மையுடைய பொருள் வன்முறையாளர்களின் ஆட்சியே நடந்தது; நடந்து கொண்டிருக்கிறது. “காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர்” என்ற கோட்பாட்டு அறிவுரை இன்றைய மத உலகத்தில் செரிக்கவில்லை.

“எல்லா உலகுக்கும் அம்மையப்பரே அம்மையப்பர்” என்ற நெறிக்கும் மதவியலாருக்கும் நெடுந்தொலைவு இருக்கிறது. கோயில்களுக்கும் குடிசைகளுக்கும் இடையே நீண்ட துரம் உள்ளது. சாதி வன்கண் மனப்பான்மையுடை யோர்களும், பலருடைய வயிற்றிலடித்துப் பழியுடை வழியே பொருள் திரட்டியவர்களும், ஈரம் என்ற ஒன்று நெஞ்சில் இல்லா மதவாதிகளும் ஒப்புடன்படிக்கை செய்துகொண்டு ஏழைகளின் வாழ்வைக் கூற்றெனக் குடித்து வருகின்றனர். இளைய மன்பதையினர் இதனை நினைந்து நினைந்து நெஞ்சுருகித் தூய புரட்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்; மன்பதை நலனுக்குற்ற மத நெறியைக் காண வேண்டும்.